நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை, அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் செல்வாக்கு பெற்ற இடம். ஆனால், சமீப காலமாக, இங்கு பாஜக பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில், நாகர்கோவில் தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது அதிமுக. இதற்கு சொந்த கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
அதிமுக மகளிர் அணியினர், எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மகளிர் அணியை சேர்ந்த சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

தளவாய் சுந்தரத்தின் கேம்?
இந்த முறை, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியை பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மகளிர் அணியினர் கோரிக்கை வைத்து வந்தனர். நாகர்கோவில் தொகுதி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மொத்தமுள்ள 6 தொகுதிகளில், 5ஐ கூட்டணிக்கு ஒதுக்கியது அதிமுக. அதில் நாகர்கோவிலும் அடங்கும். கன்னியாகுமரி தொகுதி மட்டும் தளவாய் சுந்தரத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நியாயப்படி பார்த்தால் அவர்தான் பேசி, நாகர்கோவிலை வாங்கி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் வேண்டும் என்றே அதை செய்யாமல் தவிர்த்துவிட்டார் என்று மகளிர் அணியினர் விமர்சித்திருக்கின்றனர்.
பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு
எனவே தளவாய் சுந்தரத்தை எதிர்த்து மகளிர் அணியினர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும், கிழித்தெறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த முறை சீட் ஒதுக்கப்பட்டிருந்தால் அது மேரி கமலாபாய் அல்லது தாரதி சாம்சன் என இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
நாகர்கோவில் மட்டும் கிடையாது, அதிமுக வலுவாக உள்ள அவினாசி உள்ளிட்ட தொகுதிகளையும், எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஒதுக்கியிருக்கிறார். இது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications