கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர கம்பீர திருவள்ளுவர் சிலை.. நிறுவி இன்றோடு 20வது ஆண்டு.. கோலாகலம்
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைத்து 20வது ஆண்டை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. அங்கே தியானம் செய்யவும் இட வசதி உள்ளது.

இந்த நிலையில்தான், கடலுக்குள் அமைந்துள்ள பாறையில் 133 அடிஉயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலை, கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது.
1990 செப்டம்பர் 6 ஆம் நாள் சிலை அமைக்கும் பணியை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார். மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கணபதி தலைமையில் சிலை செதுக்கும் பணி தொடங்கியது. ஆனால் சட்டமன்றத் தேர்தலையடுத்து, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. எனவே கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டது.

இதனிடையேதான், அடுத்த சட்டசபை தேர்தலில், கருணாநிதி தலைமையிலான திமுக பெரிய வெற்றியை ஈட்டியது. 1997 இல் மீண்டும் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணிகளும் புத்துயிர் பெற்றன. மொத்தம் 6.14 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை உருவானது.
அம்பாசமுத்திரத்திலிருந்து 5000 டன் எடை கொண்ட கற்களும், சோழிங்கநல்லூரிலிருந்து 2000 டன் தரமான கருங்கற்களும் வந்தன. 13 அடி நீளமும் 15 டன் எடையும் கொண்ட பெரிய கற்கள் மட்டும் 3,681 ஆகும் மற்றவை மூன்றிலிருந்து எட்டு டன் எடை கொண்டவை. காது, மூக்கு, கண், வாய், நெற்றி பகுதிகளுக்கான கற்கள் கையால் செதுக்கப்பட்ட ஒரே கற்களாகும். பனைமரமும், சவுக்கு மரமும், இரும்புக் கம்பிகளும், சாரங்கட்டப் பயன்பட்டது.
2000மாவது ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி, திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 20வது ஆண்டுவிழா இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கன்னியாகுமரி வரலாற்றுப்பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு, தமிழ் அறிஞர்கள், புலவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மலர் தூவிமரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications