பொய்ப் புகார் அளித்து மிரட்டும் பாஜக பிரமுகர்.. தீக்குளிக்க முயன்ற ராணி.. நாகர்கோவிலில் பரபரப்பு
Recommended Video
நாகர்கோவில்: வீடு ஒத்திக்கு வாங்கிய 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததோடு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து தங்களை மிரட்டும் மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராம்மோகன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்ற ராணி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் சௌராஷ்டிர தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு சோனியா என்ற மகள் உள்ளார். மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராம் மோகன் என்பவருக்கு சொந்தமான சௌராஷ்டிர தெருவில் உள்ள வீட்டை கடந்த 2001 ஆம் ஆண்டு ஒத்திக்கு எடுத்த ஜான் கென்னடி அதற்காக 90 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், ஒத்தி காலக்கெடு முடிந்தும் அதற்கான பணத்தை திருப்பி கொடுக்காமல் வாடகையை மட்டும் ராம் மோகன் வாங்கி வந்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே வீடு பழுதடைந்ததோடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டினுள் ஒரு பாம்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வீடு மாறுவதாக கூறி ராம் மோகனிடம் ஜான் கென்னடி ஒத்திக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றும் வீடு பழுது நீக்கு செலவிற்கே தாங்கள் கொடுத்த பணம் காணாது என கூறி ஒத்தி பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த ராம் மோகன், ஜான் கென்னடி குடும்பத்துடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக கூறி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக கோட்டார் காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர், இதனிடையே வீடு ஒத்திக்கு வாங்கிய 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததோடு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து தங்களை மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராம்மோகன் என்பவர் மிரட்டுவதாகவும், அதற்கு காவல் துறையினர் துணை போவதாகவும் கூறி இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராணி மற்றும் அவரது மகள் சோனியா ஆகிய இருவரும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அப்போது திடீரென கையோடு கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை விட்டு ராணி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு இருந்தவர்கள் ராணியிடம் இருந்து கேனை பிடுங்கி அவரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த போலீசார் ராணி மற்றும் அவரது மகள் சோனியா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.