Exclusive: 'கன்னியாகுமரியை குட்டி சிங்கப்பூராக மாற்றுவதே என் லட்சியம்''.. அடித்துக்கூறும் பொன்னார்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் காண்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
Recommended Video
கடந்த தேர்தலில் கைவிட்ட வாய்ப்பை இந்த முறை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து பம்பரமாக சுழன்று வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். இந்த பரபரப்பான வேளையிலும் அவரை சந்தித்து சூடான கேள்விகளை எழுப்புவோம் வாங்க.
மக்கள் ஆதரவு உள்ளது
மக்களிடம் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு உள்ளதா?
கண்டிப்பாக.. இதில் சந்தேகமே வேண்டாம். இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு ஆதரவு உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.மார்த்தாண்டம் மேம்பாலம் பெரிய திட்டம்
கன்னியாகுமரி தொகுதியில் 10 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளீர்கள்? உங்கள் பெயர் சொல்லும் திட்டங்கள் என்னென்ன?
பல ஆண்டுகள் கோரிக்கையாக இருந்து வந்த அரசு மருத்துவக்கல்லூரி அமைத்து கொடுத்துள்ளேன். 100 ஆண்டுகள் பழமையான குழித்துறை பாலத்தை செப்பனிட்டோம். பல உயிர்களை காப்பாற்றும் வகையில் மார்த்தாண்டம் மேம்பாலம் அமைத்துள்ளோம். சுசீந்திரத்தில், பார்வதிபுரத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. காஷ்மீர்-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை , தொகுதி முழுவதும் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
தற்போது தொகுதி மக்களுக்கு நீங்கள் அளிக்கக்கூடிய வாக்குறுதிகள் என்ன?
தொகுதியில் முடிக்கப்படாமல் இருக்கும் நான்கு வழிச்சாலை பணிகள் முடிக்கப்படும்.மதுரை-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஜாதி, மத பேதமின்றி ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்க அனைத்து வகையான வசதிகளும், ஊக்கமும் கொடுக்கப்படும். நான் எனக்காக ஏதும் சம்பாதிப்பது கிடையாது. எல்லாம் எனது மக்களுக்காகத்தான். கன்னியாகுமரியை குட்டி சிங்கப்பூராக மாற்றுவதுதான் என் லட்சியம்.
பணிகள் நிறைய உள்ளன
பாஜகவின் மூத்த தலைவரான நீங்கள் ஏன் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யவில்லை?
நான் வேட்பாளராக நிற்கிறேன். இந்த 6 சட்டமன்ற தொகுதிகளையும் நான் கவனிக்க வேண்டியதுள்ளது. ஆதலால் பிரசாரம் செய்யவில்லை. கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர்.
ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவில் ஒரு எம்.எல்.ஏ. வெற்றி பெற்றாலும் அவர் பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பார் என்று கூறுகிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
2001-ல் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது 1999-ல் ஜெயித்த தி.மு.க எம்.பி.க்கள் பாஜக எம்.பி.யாகவா செயல்பட்டார்கள். இதற்கு ஸ்டாலின் பதில் சொல்லட்டும்.
கருணாநிதிக்கு பாராட்டு
பிரதமர் மோடியும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் ஒன்றல்ல என்று தி.மு.க.வினர் வாதத்தை முன்வைக்கீறார்களே?
இதற்கு பெயர் வாதம் இல்லை. பக்கவாதம். கருணாநிதி வாஜ்பாயை பெரிய தலைவராக பார்த்ததுபோல்தான் பிரதமர் மோடியையும் பார்த்தார். அதுபோக கூட நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரசை வசைபாடினார். இது ஸ்டாலினுக்கு தெரியாதா? மோடி யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அவரது எண்ணம் எல்லாம் வளர்ச்சி மட்டும்தான். ஊழல் செய்தால் அவருக்கு பிடிக்காது. வாஜ்பாய் போல அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் மோடி. இதனால் ஸ்டாலின் பார்க்கக்கூடிய பார்வையில் கோளாறு உள்ளது. அவர் நல்ல கண்ணாடி போட வேண்டும்.
விஜய்வசந்த் அனுபவமில்லாதவர்
உங்களை எதிர்த்து போட்டியிடும் விஜய்வசந்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அதனால் அவரை பற்றி அதிகம் பேச முடியாது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் கூட அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அனுபமில்லாத அவரால் என்ன செய்ய முடியும்? ஆனால் நான் வெற்றி பெற்று வந்தால் மத்திய அரசிடம் பேசி திட்டங்களை கொண்டு வருவேன்.