அவர்களால் சகித்துக் கொள்ள முடியலை.. அதான் எதிர்க்கிறார்கள்... பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: நாட்டு மக்கள் நலன் கருதி இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் பார்வையோடு பார்த்ததால் அவர்களால் ( எதிர்பவர்களால் ) சகித்துக்கொள்ள முடியவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் , புதிதாக பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்கவும் உள்ளார்.

இதற்காக விழா கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது...
இடைக்கால பட்ஜெட் என்பது மலிவான தேர்தல் அறிக்கை என ஸ்டாலின் கூறியது, மலிவாகி போனவர்களின் அறிக்கை. நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் போது ஆரம்பத்தில் எக்காளம் இட்டுக்கொண்டு இருந்த எதிர்க்கட்சிகள் மக்கள் திட்டம் அறிவிக்கும் போது சோர்ந்து சோர்ந்து படுத்துவிட்டனர்.
நாட்டு மக்கள் நலன் கருதி இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் பார்வையோடு பார்த்ததால் அவர்களால் ( எதிர்பவர்களால் ) சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்தால் இவர்களால் சகித்து கொள்ள முடியாது என்பதை காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகள் நிரூபித்துள்ளது.
பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி குறைந்தது 30 இடங்களில் வெற்றிபெறும். பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று கடந்த தேர்தலிலும் நாங்கள் கூறவில்லை இந்த தேர்த்திலும் அப்படித்தான்.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமருக்கு காங்கிரஸ் கட்சி கருப்பு கொடி காட்டும் என அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி முழுசாக கருப்பாக உள்ளது. இவர்கள் கருப்பு கொடி காண்பித்தால் வித்தியாசம் தெரியாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications