சத்தமே இல்லாமல் வேறலெவல் வேலை.. இந்து சமய அறநிலையத்துறையின் அடுத்த முயற்சி
கோயில்களின் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, அங்கு எல்லைக்கற்களை பதிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, அங்கு எல்லைக்கற்களை பதிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த கொள்கை விளக்க அறிவிப்பின் படி, "இந்து சமய அறநிறுவனங்களுக்குச் சொந்தமான 22600 கட்டிடங்களும், 33665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. விவசாய நிலைங்கள் 127729 நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த 01.07.2021 முதல் 31.03.2022 வரையிலான காலத்தில் மட்டும் திருக்கோயிலுகளுக்குச் சொந்தமான மேற்கண்ட அசையாச் சொத்துக்களிலிருந்து ரூபாய் 151.65 கோடி குத்தகை வருமானம் ஈட்டப் பெற்றுள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை நிலங்கள் தனி நபர் பெயரில் தவறுதலாகப் பட்டாமாற்றம் செய்யப்பட்ட இனங்களை கண்டறிந்து திருக்கோயில் நிருவாகத்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவரிடம் மேல்முறையீடு செய்து உத்தரவு பெற்று நிலங்கள் மீட்கப்படுகின்றன. 07.05.2021 முதல் 31.03.20222 வரையிலான காலத்தில் 133 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

2566 கோடி ரூபாய்
07.05.2021 முதல் 31.03.20222 வரையிலான காலத்தில் 167 கோயில்களின் அசையா சொத்துக்களில ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்பிலிருந்து 1184.13 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும், 467.0884 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும், 47.0813 கிரவுண்டு பரப்பிலான கட்டிடங்களும் மற்றும் 38.1867 கிரவுண்டு அளவிலான திருக்கோயில் குளக்கரை பகுதிகளும் மீட்டு எடுக்கப்பட்டு அந்தந்த திருக்கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.2566.94 கோடியாகும்.

ரோவர் கருவி
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை நவீன புவியிடங்காட்டி உபகரணங்கள் மூலம் அளவீடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ரோவர் கருவிகளின் துணையுடன் திருக்கோயில்நிலங்கள் அளவீடு செய்யப்படுகிறது. மேலும் திருக்கோயில் நிலங்களின் எல்லைகளிலும், வளைவுகளிலும் சிமெண்டினாலான எல்லைத் தூண்கள் நடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்நிலையில் இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகம் முழுவதும் எல்லை கற்கள் பதிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் 4,600 ஏக்கர் நிலங்கள் பதிவில் உள்ளன. இந்த நிலங்களில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டு, அங்கு எல்லை கற்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அறநிலையத்துறை
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நல்லூர் பகுதியில் புதன்கிழமை அறநிலையத்துறை கோவில் நிலங்களில் தனித்தாசில்தார் சஜித் தலைமையில் நில அளவையர்கள் அஜித், ராஜேஷ், விக்கேஷ், கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நிலங்களை அளவிட்டு, அங்கு எல்லை கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி இதுவரை 530 ஏக்கர் நிலங்கள் அளவிட்டு எல்லை கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதுபோல கோவில் நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications