திருச்செங்கோட்டில் ஒரே பைக்கில் 3 இளைஞர்கள்.. திடீரென வந்த வண்டி.. புளிய மரத்தில் மோதி பெரும் சோகம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இடதுபுறம் திரும்பிய வாகனத்தில் மோதாமல் இருக்க, மோட்டார் சைக்கிளை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது... இந்த விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேரூர் செக்காரப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 18 வயதாகும் தரணிதரன் என்ற இளைஞர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள குள்ளப்பனூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதாகும் சதீஷ் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு பிஇ படித்து வந்தார். சேலம் கருப்பூர் மேட்டுப்பதி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோகுல்.

நண்பர்களான இவர்கள் 3 பேரும் கல்லூரியில் உணவு இடைவேளையின்போது ஒரே இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு நோக்கி சென்றனர். அப்போது செம்மாம்பாளையம் அருகே சென்றபோது இடதுபுறம் திரும்பிய வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோகுல் திருப்பி உள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் கோகுல் மற்றும் சதீஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பைக்கில் இருந்து விழுந்த தரணிதரன் படுகாயங்களுடன் மயங்கி விழுந்தார். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்புலன்ஸ் உடனடியாக வந்து படுகாயம் அடைந்த தரணிதரனை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
மயக்கம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தரணிதரனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த கோகுல் மற்றும் சதீசின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஒரே வாகனத்தில் 3 பேர் செல்லும் போது வாகனத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்கிற நிலையில், விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications