நாமக்கல் அருகே சோகம்! தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு குழந்தைகள் பலி
நாமக்கல்: நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனியில் தண்ணீரில் விழுந்து தாய், 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பியை காப்பாற்ற அண்ணனும் இரு குழந்தைகளை காப்பாற்ற தாயும் தண்ணீர் தொட்டியில் குதித்ததால் மூவரும் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவருக்கு நிதின் ஆதித்யா என்ற 11 மாத ஆண் குழந்தையும், யாத்விக் என்ற 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் இந்துமதி வீட்டில் தண்ணீர் தொட்டியில் (சம்ப்) தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என பார்க்க இந்துமதி திறந்துவைத்தார். அது நிரம்புவதற்காக மூடியை மீண்டும் மூடாமல் அப்படியே விட்டுவிட்டார்.
அந்த இடத்தில் இந்துமதியின் குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 11 மாத குழந்தை நிதின் தண்ணீர் தொட்டியில் விழுந்தான். உடனே அங்கிருந்த யாத்விக், அந்த குழந்தையை பிடிக்க சென்ற போது அந்த குழந்தையும் விழுந்துவிட்டது.
இவர்களது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த இந்துமதி , குழந்தைகளை காப்பாற்ற தண்ணீர் தொட்டியில் குதித்தார். அதில் 10 அடிக்கு தண்ணீர் நிரம்பியிருந்ததால் மூவரும் மூச்சுத்திணறி பலியாகிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications