அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்.. இத்தனை சிறப்புகளா?
நாமக்கல்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் மூலம் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. மணி தயாரிப்புக்கு காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
கோவிலில் மணி ஓசை ஒலிப்பதை கேட்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம். மனித மூளையானது வலது, இடது என இருபகுதியாய் பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டும் இரு வேறு செயல்திறன்களை கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை கோவில் மணியில் இருந்து எழும் ஒலிகளுக்கு உண்டாம். அப்படி செயல்படும் விதத்தில்தான் கோவில் மணி தயாரிக்கப்படுகிறது.

ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்து வகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது. கோவில் மணியை அடித்ததும் எழும் ஒலியானது எதிரொலியுடன் கூடிய ஆழ்ந்த, இடைவிடாத ஒலியாக உரக்க ஒலிக்கும். ஒலியின் முடிவில் கேட்கும் எதிரொலிகள் நம் காதுகளில் 7 வினாடிகள் நீடிக்கிறது. இது மனித உடலிலுள்ள 7 சக்தி மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை, சகஸ்ராரம் ஆகியவற்றைத் தாக்குகிறது.
மணியிலிருந்து எழும் ஓசையில் நாம் "ஓம்" என்ற மந்திரத்தை உணர முடியும். கர்ப்பகிரகத்திலிருக்கும் மணியை, இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போதும், இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போதும், உணவு படைக்கும் போதும் அடிப்பதுண்டு. கோவிலுக்கு போவோர் தங்கள் பிரார்த்தனையை இறைவனுக்கு நினைவுப்படுத்தவும் கோவில்மணியை அடிப்பார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மணியை ராமர் கோவிலுக்கு செய்து கொடுத்துள்ளார் பெங்களூர் தொழிலதிபர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை, இதற்கென அமைக்கப்பட்ட ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்த அறக்கட்டளை தான் கோயிலை நிர்வகிக்க உள்ளது.
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக சடங்குகள் ஜனவரி 16ஆம் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த சடங்குகளை செய்ய நாடு முழுவதிலும் இருந்து வேதங்களின் அனைத்து கிளைகளில் இருந்தும் 121 அறிஞர்கள் அயோத்தி வருகின்றனர். இந்த வேத அறிஞர்களை காசி ஆச்சாரியரான பண்டிட் மதுராநாத் தீட்சித் வழிநடத்த உள்ளார்.
ராம் லல்லா எனப்படும் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதை முன்னிட்டு, ஜனவரி 16-ம் தேதி முதல் மகாபூஜைக்கான சடங்குகள் தொடங்கும் என்று கோயில் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 மதியம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை வழக்கமான சடங்குகள் செய்யப்பட்டு ராமர் சிலை நிறுவப்பட வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஆரத்தி வழிபாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் கடந்த ஒரு மாத காலமாக தயார் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மணிகள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்யப்பட்டு பெங்களூருக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்த அனைத்து மணிகளும் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட உள்ளது. கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இம்மணிகள் அனைத்தும் அங்கு ஒலிக்க உள்ளன.
இதுகுறித்து மணி தயாரிப்பில் ஈடுபட்ட ராஜேந்திரன்,"கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு மணிகளை வழங்க உள்ளார். இதற்கான அனுமதியை அவர் பெற்றுள்ளார். அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்களை அணுகி மணி தயார் செய்வதற்கான ஆர்டரை வழங்கினார் என்று கூறினார்.
70 கிலோ எடையில் 5 ஆலய மணிகள், 60 கிலோ எடையில் 6 ஆலய மணிகள் மற்றும் 25 கிலோ எடையில் ஒரு மணி என மொத்தம் 12 மணிகள், 36 பிடி மணிகள் தயாரிப்பதற்காக ஆர்டர் வழங்கினார். மொத்தம் 25 பேர் கடந்த ஒரு மாத காலம் இரவு பகலாக இப்பணியை மேற்கொண்டு முடித்துள்ளோம். மணி தயாரிப்புக்கு காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை ராஜேந்திர நாயுடு வழங்கினார் என்று கூறினார்.
ராமர் கோயிலுக்கு மொத்தம் 108 மணிகள் தேவை. முதல் கட்டமாக 48 மணிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்களின் மனம் குளிர கம்பீரமாக ஒலிக்கப்போகின்றன நாமக்கல் கோவில் மணிகள்.












Click it and Unblock the Notifications