சாலையில் தீ பற்றி எரிந்த கார்! அதிர்ஷ்டவசமாக மகனுடன் உயிர் தப்பிய ராசிபுரம் தாசில்தார்!
நாமக்கல்: நாமக்கல் அருகே தாசில்தார் பயணித்த கார் சாலையில் திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசில்தாராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் சுதந்திர தினமான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

விடுமுறை நாள் என்பதால் மகனை கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக அரசு வாகனத்தை தவிர்த்துவிட்டு, தனது சொந்த வாகனத்தில் நாமக்கல் நோக்கி பிற்பகலில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது காரின் முன் பக்கம் புகை வந்திருக்கிறது.
அத்துடன் உள்ளே இருந்த வயர்கள் உருகியதை கண்ட தாசில்தார் கார்த்திகேயன் சடாரென தனது காரை சாலையில் நிறுத்திவிட்டு மகனுடன் இறங்கிவிட்டார். அவர் இறங்கிய சில நிமிடங்களில் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கூறி அவர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. வெயில் அதிகமாக இருந்த நேரத்தில் அதி வேகத்தில் காரை இயக்கியதால் இஞ்சினில் வெப்பம் தாங்காமல் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாசில்தார் கார்த்திகேயன் பயன்படுத்தி வந்தது பழைய மாடல் மாருதி 800 கார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் வாகனத்தை முறையாக பராமரிக்காவிட்டால் இது போன்ற விபரீதங்கள் நிகழக்கூடும் என்பது பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை பாடமாக இது அமைந்துள்ளது.
அதேபோல் வாகனம் கன்டிஷனாக இல்லாவிட்டால் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டியது அவசியம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications