நாமக்கல் திமுக மாநாடு முன்னேற்பாடுகள் விறுவிறு! முதல்வர் தந்த முதல் அசைன்மெண்ட்! பின்னணி என்ன?
நாமக்கல்: நாமக்கல்லில் ஜூலை 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார், இதற்கான முழுப் பொறுப்பை ஏற்று முதலமைச்சரின் பாராட்டை பெறுவதற்காக பம்பரமாக சுழன்று வருகிறார்.
ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நடத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
”அக்னிபாத் வீரர்களுக்கு முடிதிருத்தம், சலவை பயிற்சி” - எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய மத்திய அமைச்சர்
உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
நாமக்கல்லில் ஜூலை 3-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் திமுக சார்பில் வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் இந்த நாமக்கல் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்கள். காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த ஒரு நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் பல அறிஞர்கள் உரை நிகழ்த்தவுள்ளார்கள். இதேபோல் இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
முதல் அசைன்மெண்ட்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை இது போன்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என்றால் மூத்த மாவட்டச் செயலாளர்கள் வசம் தான் அந்த பொறுப்பை ஒப்படைப்பார். இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டிற்கான பொறுப்பை இளம் மாவட்டச் செயலாளரான ராஜேஷ்குமார் எம்.பி. மீது நம்பிக்கை வைத்து அவர் வசம் ஒப்படைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனால் தன்னை நம்பி முதல்வர் கொடுத்துள்ள முதல் அசைன்மெண்டை மிகப் பிரம்மாண்டமாக நடத்திக்காட்டி அவரது நம்பிக்கையை மெய்பிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் ராஜேஷ்குமார் எம்.பி.
எவ்வாறு செயல்படுவது?
நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிககளில் எந்தெந்த திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் உட்பட இன்னும் சில விவகாரங்கள் குறித்து அந்த மாநாட்டில் விரிவாக பேசப்படவுள்ளது. முதலில் இந்த மாநாட்டை மதுரையிலோ அல்லது கோவையிலோ நடத்தலாமா என முதல்வர் யோசித்ததாகவும் ராஜேஷ்குமார் எம்.பி. மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவும் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனைப் படியும் மாநாட்டை நாமக்கல்லில் நடத்த முதல்வர் ஒகே சொன்னதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பணிகள் விறுவிறு
இன்னும் மாநாட்டுக்கு 15 நாட்கள் கூட இல்லாததால் முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள சூழலில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறது ராஜேச்ஜ்குமார் எம்.பியின் டீம்.