திடீரென ரத்த நிறத்துக்கு மாறிய நிலா.. வானில் நிகழ்ந்த அற்புதம்.. சந்திர கிரகணத்தை ரசித்த மக்கள்
நியூயார்க்: 2025ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் வானில் நேற்று நிகழ்ந்தது. திடீரென்று ரத்த நிறத்தில் நிலா தெரிந்தது. இதனை பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர். சந்திர கிரகணத்தின்போது நிலா ரத்த நிறத்தில் மாற என்ன காரணம்? இந்த சந்திர கிரகணத்தை யாரெல்லாம் கண்டு ரசித்தனர்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தினமும் வானில் பல்வேறு அரிய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதில் பல நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியாது. அதேவேளையில் சில நிகழ்வுகளை பூமியில் இருந்தபடியே நம்மால் பார்க்க முடியும். அந்த வகையில் 2025ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் நடந்து முடிந்துள்ளது.

அதாவது சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி வரும்போது நிகழும் நிகழ்வாகும். அதன்படி சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி வந்தது.
இப்படி வரும்போது சூரியனின் ஒளி நேரடியாக நிலவின் மீது விழாது. பூமியில் மட்டுமே விழும். பூமியின் மீது படும் சூரியஒளி நிலவில் எதிரொலிக்கும். அந்த சமயத்தில் அலை நீளம் அதிகமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அப்போது 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' என்று அழைக்கப்படும். அதன்படி இப்போது ரத்த நிலாவை உருவாக்கும் சந்திரகிரகணம் நடந்து முடிந்தது.
மார்ச் 13ம் தேதி (அதாவது நேற்று)இரவு 10.57 மணிக்கு இந்த கிரகணம் தொடங்கியது. இந்த சந்திர கிரகணம் சுமார் 6 மணிநேரம் வரை நீடித்தது. இன்று அதிகாலை 2.26க்கு முழு சந்திர கிரகணம் தெரிந்தது. அதிகாலை 3.31 மணிக்கு பிறகு மணி வரை சந்திரகிரகணம் முடிவுக்கு வந்தது. இந்த ரத்த நிலா அமெரிக்காவில் தெரிந்தது. சந்திர கிரகணம் நிகழ்ந்தபோது நம் நாட்டில் பகல் பொழுதாக இருந்தது. இதனால் நம் நாட்டின் எங்கும் இந்த ரத்த நிலாவை பார்க்க முடியவில்லை.
அதேவேளையில் அமெரிக்கர்கள் இந்த சந்திர கிரகணத்தை ரசித்தனர். சூரிய கிரகணம் என்றால் தான் பொதுமக்கள் கண்களை பாதுகாக்கும் சிறப்பு கண்ணாடிகளை அணிந்து பார்க்க வேண்டும். சந்திர கிரகணத்தை சாதாரண கண்களால் பார்க்கலாம் என்பதால் பலரும் நேற்று ரசித்தனர்.
சந்திர கிரகணத்தில் நிலா ரத்த நிறத்தில் மாறியதன் முழு அழகை ரசிக்க பல இடங்களில் தொலைநோக்கிகளை பயன்படுத்தி மக்கள் பார்த்தனர்.இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று முடிவடைந்த நிலையில் அடுத்த சந்திர கிரகணம் விரைவில் வானில் நிகழ உள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 7 ம் தேதி அடுத்ததாக சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மக்கள் ரசிக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications