பனிமலையில் மயக்கம்.. நின்றுபோன இதயத்துடிப்பு.. 45 நிமிடம் போராடி மீண்டும் உயிர் தந்த மருத்துவர்கள்!
மரணமடைந்த நபர் 45 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பெற்ற அதிசய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்: பனிமலையில் சிக்கி உயிரிழந்த நபரை, அமெரிக்க மருத்துவர்கள் போராடி உயிர் பிழைக்க வைத்த அதிசய சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 45 வயதான காபின்ஸ்கி என்பவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து அந்நாட்டின் தேசிய பூங்காவில் மலையேற்றம் சென்றார். பனிபடர்ந்த அந்த மலையில் பாதி தூரம் சென்ற பிறகு, மாலை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாக முடிவு செய்துவிட்டு நண்பர்கள் இருவரும் வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றுவிட்டனர்.
மாலை வெகு நேரமாகியும் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு காபின்ஸ்கி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, காபின்ஸ்கியை ஹெலிகாப்டர், ஆளில்லா விமானம் உள்ளிட்டவை கொண்டு போலீசார் தேடினர்.

மயங்கிய நிலையில் மீட்பு
வெகு நேரம் தேடிய பிறகு மலையின் ஒரு இடத்தில் காபின்ஸ்கி மயங்கிக்கிடப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மயங்கிய நிலையில் சுயநினைவு இல்லாமல் இருந்தாலும், அப்போது அவருக்கு நாடித்துடிப்பு இருந்தது.

தீவிர முயற்சி
எனவே காபின்ஸிகிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தொடங்கினர். ஆனால் சிறிது நேரத்தில் அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டது. காபின்ஸ்கி இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஆனால் மருத்துவர்கள் தங்களது முயற்சியை கைவிடவில்லை.

உயிர் காக்கும் சிகிச்சை
காபின்ஸ்கிக்கு சிபிஆர், எக்மோ உள்ளிட்ட கருவிகளை கொண்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். சுமார் 45 நிமிட போராட்டத்துக்கு பிறகு காபின்ஸ்கியின் இதயம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கண்ணீர் மல்க நன்றி
மயக்க நிலையில் இருந்து இரு தினங்கள் கழித்து கண் விழித்து பார்த்த காபின்ஸ்கி நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு கண்கலங்கிப் போனார். இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட தன்னை மீண்டும் உயிர்ப்பிழைக்கச் செய்த மருத்துவர்களுக்கு அவர் கண்ணீர் மல்க நன்றி கூறினார். அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications