இந்தியாவுக்கு கிடைத்த சான்ஸ்! சறுக்கும் அமெரிக்கா.. 30 ஆண்டுகளில் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை!
நியூயார்க்: அமெரிக்க டாலர் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை சரிவை சந்தித்திருக்கிறது. டாலரின் பிடியிலிருந்து தப்பிக்க இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க டாலர்: உலகம் முழுவதும் பரிவர்த்தனைக்கு அமெரிக்க டாலர் மிக முக்கியம். இந்நிலையில் 2024-2025ன் மூன்றாவது காலாண்டில் (ஜூலை - செப்) அமெரிக்க டாலர் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் 0.85% குறைந்திருக்கின்றன. மொத்தமாக பார்த்தால் 12 மாதங்களில் 1.8% வரை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இவ்வளவு பெரிய சரிவு கடந்த 30 ஆண்டுகளில் இப்போதுதான் முதல்முறை நடக்கிறது. சரிவு குறித்த தகவல்களை சர்வதேச நாணய நிதியமும் (IMF) உறுதி செய்திருக்கிறது.

போட்டியாக ஐரோப்பா, சீனா: பரிவர்த்தனைக்கு டாலர் பயன்படுத்தப்படவில்லை எனில்? வேறு எது பயன்படுத்தப்பட்டது என்கிற கேள்விக்கு ஐரோப்பாவின் 'யூரோ' மற்றும் சீனாவின் 'யென்' ஆகியவை பதிலாக கிடைத்திருக்கிறது. அதாவது யூரோ கரன்சி மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் 20.2% அதிகரித்துள்ளன. மறுபுறம் 'யென்' கரன்சி மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் 5.5% உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்காவின் மொத்த வியாபார பரிவர்த்தனை 57.39% என்கிற அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. இந்த சரிவு காரணமாக அமெரிக்காவின் கடன் தொகை, 36 ட்ரில்லியன் டாலராக அதிகரிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
அமெரிக்காவின் கரன்சியான டாலர், உலகின் பச்சை தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தங்கத்தின் மீது சமீபத்தில் உலக நாடுகள் நம்பிக்கை இழந்திருப்பதே இந்த சரிவுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கான வாய்ப்பு: ஆக இப்படியாக டாலர் பரிவர்த்தனை சரிவு இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு மாற்று கரன்சி குறித்த தேவையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பிரிக்ஸ் கரன்சி குறித்த பேச்சு அடிபட்டிருந்தது. ஆனால் இந்தியா டாலரை மட்டுமே நம்புவதாக பேசி வருகிறது. இந்த பேச்சை கைவிட்டுவிட்டு வளரும் நாடுகள்+சீனா மற்றும் ரஷ்யா சேர்ந்து புதிய கரன்சியை உருவாக்கினால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு அப்படியே பாதியாக குறைந்துவிடும்.
ஆனால் இதனை இந்தியா தைரியமாக முன் நின்று இந்த மாற்றத்தை செயல்படுத்த வேண்டும். அந்நிய செலாவணி கையிருப்பு என்பது, ஒரு நாடு எவ்வளவு அமெரிக்க டாலர்களை வைத்திருக்கிறது என்பதை பொறுத்துதான். நமக்காக புதிய கரன்சியை உருவாக்கிக் கொண்டால் இனி அந்நிய செலாவணி கையிருப்பு குறித்து கவலையே தேவையில்லை. இந்த வாய்ப்பை இந்தியா எப்படி பயன்படுத்த போகிறது என்பதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.
ஏன் பச்சை தங்கம் பெயர் காரணம்: அதாவது, இந்தியாவுக்கு பெட்ரோல் வேண்டும் எனில் அரபு நாடுகளில் இருந்து வாங்குகிறோம். இதற்காக டாலரில்தான் பணம் வேண்டும் என்று அரபு நாடுகள் கேட்கின்றன. அதேபோல ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கும் அமெரிக்க டாலரில்தான் பணம் கொடுக்கிறோம். இப்படியாக, டாலர் மிக முக்கியமானதாக இருக்கிறது. டாலர் பற்றாக்குறை ஏற்பட்டால் இலங்கை போன்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டி வரும்.
ஆனால் அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள். வெறுமென டாலர் கரன்சியை அச்சடிப்பதன் மூலம் உலகில் எந்த நாடுகளில் உள்ள வளங்களை வேண்டுமானாலும் வாங்கிவிட முடியும். எனவேதான் இதனை பச்சை தங்கம் என்று அழைக்கிறோம்.












Click it and Unblock the Notifications