டிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்!
டெல்லியில் நடந்த கலவரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியமான விவாதமாக உருவெடுத்து இருக்கிறது.
நியூயார்க்: டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த கலவரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியமான விவாதமாக உருவெடுத்து இருக்கிறது.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது.இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டனர்.
உலகம் முழுக்க இந்த கலவரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், செனட்டர்கள் இந்த கலவரத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

என்ன சொன்னார்
அமெரிக்காவில் ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான பெர்னி சாண்டர்ஸ் இதை கடுமையாக எதிர்த்துள்ளார்.பெர்னி சாண்டர்ஸ் தனது பேச்சில், இந்தியாவில் 200 மில்லியன் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதானே சொந்த நாடு. ஆனால் அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. அரசு இதை தடுக்கவில்லை. அங்கு இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். பலர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இந்த கலவரத்தை தடுக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது, என்றுள்ளார்.

வேறு என்ன சொன்னார்
பெர்னி சாண்டர்ஸ் ஒரு பக்கம் இந்திய கலவரத்தை பற்றி பேசி உள்ளார் என்றால், இன்னொரு பக்கம் வேறு சில அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியாளர்களும் இதை பற்றித்தான் பேசி உள்ளனர். ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிட முயன்று கொண்டு இருக்கும் இன்னொரு செனட்டர் எலிசபெத் வாரன், இதை கடுமையாக கண்டித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

செனட்டர் எதிர்ப்பு
ஜனநாயக கட்சியின் இன்னொரு செனட்டர் மார்க் வார்னர் இதைதான் குறிப்பிட்டுள்ளார். அதில் டெல்லியில் நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகப்பெரிய எச்சரிக்கை மணி. இரண்டு நாட்டு உறவில் இது போன்ற கலவரங்கள் பெரிய பாதிப்புகளை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்க காங்கிரஸ் அவை உறுப்பினர், ஜெமி ரஸ்கின், டெல்லியில் கலவரம் கவலை அளிக்கிறது.

மத வெறி
இந்தியாவில் மத வெறியும், இன வெறியும் உச்சம் அடைந்துள்ளது. அங்கு பன்முகத்தன்மை குறைந்துவிட்டது. மத சுதந்திரம் போய்விட்டது. பொது இடத்தில் கூட மோசமான கலவரங்கள் போலீஸ் முன்னிலையில் நடக்கிறது என்று கூறியுள்ளார். அமெரிக்க வெளிநாட்டு கவுன்சில் தலைவர் ரிச்சர்ட் என் ஹாஸ் இதேபோல் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் உள்ள இசுலாமியர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

எல்லோரும் குடிமகன்கள்
அவர்கள் எல்லோரும் அந்நாட்டின் குடிமகன்கள். அரசு அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. தங்களுக்கு அரசியல் லாபத்திற்காக இப்படி செயல்படுகிறார்கள். வரிசையாக காங்கிரஸ் அவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் இந்தியாவின் கலவரத்தை கண்டித்து இருக்கிறார்கள். இவர்களில் ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட முயலும் நபர்களும் அடக்கம்.

அதிபர் தேர்தல்
இதனால் இந்திய கலவரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உள்ளது. இந்திய கலவரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதை இந்தியா கவனித்துக் கொள்ளும் என்று மட்டும் குறிப்பிட்டார். இதனால் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

என்ன உறவுகள்
டிரம்பின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான கொள்கை சரியில்லை. அவர் இந்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார். கலவரத்தை அவர் கண்டிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அதேபோல் இந்தியாவுடன் அவர் உறவு ஆக்கபூர்வமானதாக இல்லை, தேர்தல் சார்ந்ததாக, விளம்பரம் சார்ந்ததாக மட்டுமே உள்ளது என்று புகார் உள்ளது. இது எல்லாம் அதிபர் தேர்தல் விவாதத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருகிறது.

கட்சிக்கு உள்ளேயே புறக்கணிப்பு
அதேபோல் இன்னொரு பக்கம் ஜனநாயக கட்சி வேட்பாளர் துளசி கப்பார்ட் பாஜகவிற்கு நெருக்கமாக இருப்பதால் கட்சிக்கு உள்ளேயே புறக்கணிப்புகளை சந்தித்து வருகிறார். மோடிக்கு இவர் நெருக்கம் ஆனவர். துளசிக்கு பாஜக நிதி அளிக்கிறது என்ற புகாரும் ஒரு பக்கம் உள்ளது. இதனால் தற்போது துளசி கப்பார்ட், அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சிக்குள் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிபர் வேட்பாளராக இவர் வருவார் என்று கருதப்பட்ட நிலையில், இவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மோடி எதிர்க்கும்
ஆனால் மோடியை எதிர்க்கும் பெர்னி சாண்டர்ஸ் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளார். பெர்னி சாண்டர்ஸ் இடதுசாரி கொள்கை கொண்டவர். இவர் மீது நிறைய புகார்கள், விமர்சனங்கள் இருக்கிறது. ஆனாலும் இவர் வலதுசாரி கொள்கை கொண்ட டிரம்ப், மோடி இருவரையும் மிக தீவிரமாக எதிர்த்து வருகிறார். மொத்தத்தில் இந்திய கலவரத்தை எதிர்ப்பவர்கள், எதிர்க்காதவர்கள் என்ற இரண்டு குழு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறது.

என்ன நடக்குமோ
இதில் ஒருவேளை பாஜக கொள்கைகளை எதிர்க்கும் பெர்னி சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் போன்றவர்கள் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், இந்தியா மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். குடியரசு கட்சியிலேயே கூட டிரம்பிற்கு பதில் வேறு ஒருவர் போட்டியிட்டால், அக்கட்சி இதே உறவை பாஜகவுடன் மேற்கொள்ளுமா என்பது சந்தேகம்தான். இந்த வருடம் இறுதியில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications