வெற்றியை நெருங்கும் டிரம்ப்! ஆனால் கடந்த 2 தேர்தல்களில் அவர் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் டிரம்ப் முன்னணியில் இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு தேர்தலில் அவர் எதிர்பார்த்ததை விட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார். குறிப்பாக, 2016ல் அவர் வெற்றி பெற்றபோதும் கூட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார்.
உலக வரலாற்றில் பல மாற்றங்களை அமெரிக்க அதிபர் தேர்தல் ஏற்படுத்தியிருக்கிறது. பல போர்களை உருவாக்கவும், கைவிடவும் கூட இந்த தேர்தல்கள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது அதிபராக உள்ள பைடனின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே, புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியிலிருந்து தற்போதைய அதிபர் பைடன் போட்டியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், வயது மூப்பு காரணமாக, துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியில் இறங்கினார்.

மறுபுறம் குடியரசு கட்சியிலிருந்து டொனால்ட் டிரம்ப் களமிறங்கினார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டிருந்தது. கருத்து கணிப்புகளில் கமலாவின் பெயரே பெரும்பாலும் அடிப்பட்டது. ஆனால் டிரம்ப் தனது வெற்றி குறித்து உறுதியாக நம்பியிருந்தார். இப்படி இருக்கையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். செனட் சபையில் இவர் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 50 இடங்களை பெற்றால் பெரும்பான்மை. டிரம்ப் தரப்பு 51ஐ பெற்றிருக்கிறது. கமலா தரப்பால் 42ஐதான் பெற முடிந்திருக்கிறது.
இது தவிர அமெரிக்க அதிபராக வேண்டும் எனில், எலக்டோரல் வாக்குகளை அதிக அளவில் பெற வேண்டும். மொத்தமாக 270 எலக்டோரல் வாக்குகளை பெற்றால் அதிபராக தேர்வாகலாம். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களில் டிரம்ப் இந்த விஷயத்தில் பயங்கரமாக அடி வாங்கிவிட்டார். கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடன் 8,12,84,666 வாக்குகளையும், டிரம்ப் 7,42,24,319 வாக்குகளையும் பெற்றிருந்தார். ஆனால் மக்கள் வாக்குகள் மட்டுமே அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. மேலே குறிப்பிட்டதைப்போன்று எலக்டோரல் வாக்குகளும் முக்கியம். அந்த வகையில், டிரம்ப் வெறும் 232 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால், பைடன் 306 வாக்குகளை பெற்று புதிய அதிபராக தேர்வானார்.
அதற்கும் முன்னர் 2016 தேர்தலில் நடந்த சம்பவம்தான் சுவாரசியமானது. எலக்டோரல் வாக்குகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் மிகச்சரியாக உணர்த்தியிருந்தன. அதாவது, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 6.5 கோடி வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெறும் 6.2 கோடி வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இருப்பினும் அவர் அதிபராக தேர்வானார்.
காரணம் எலக்டோரல் வாக்குகள்தான். இதில் டிரம்ப் 302 வாக்குகளையும், ஹிலாரி வெறும் 227 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆக இந்த படிப்பிணையை எல்லாம் வைத்துதான் டிரம்ப் இந்த தேர்தலில் கவனமாக களமாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications