கிறிஸ்தவர்களை குறிவைத்து சர்ச்சை பேச்சு! 'சர்வாதிகாரி' டிரம்ப் என கமலா ஹாரிஸ் தரப்பு விமர்சனம்
நியூயார்க்: அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பேசியிருந்த விஷயம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கமலா ஹாரிஸ் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல் நிலை காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

டிரம்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையே போட்டி தீவிரமடைந்திருக்கிறது. பிரசாரங்கள் சூடுபிடித்திருப்பதால் யார் ஜெயிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படி இருக்கையில் டிரம்பின் பிரசாரம் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
புளோரிடாவில் 'டர்னிங் பாயிண்ட் ஆக்ஷன்' என்ற பழமைவாதக் குழு பிரசார கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்று பேசிய டிரம்ப், "இந்த தேர்தலில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இந்த ஒரு முறை வாக்களித்தால் போதுமானது. அதன் பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் எல்லா பிரச்னையும் சரி செய்யப்படும். எனதருமை கிறிஸ்தவர்களே என்னை நீங்கள் நன்கு அறிவீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன். இந்த ஒருமுறை கட்டாயம் எனக்கு வாக்களியுங்கள்" என்று பேசியிருந்தார்.
தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா, இதில் மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்பது என்பது பிரிவினையை ஏற்படுத்தும் என்று, டிரம்பின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கமலா ஹாரிஸ் தரம்பும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
"அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு. அதை மெய்பிக்கும் விதமாகத்தான் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயகத்தை அழிக்க பார்க்கிறார். அவர் அமெரிக்காவை சர்வாதிகாரியாக மாற்ற நினைக்கிறார்" என்று கமலா ஹாரிஸ் தரப்பு விமர்சித்திருக்கிறது.
டிரம்பின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே சர்வாதிகாரி தொடர்பாக அவருடைய கருத்துக்கள் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. "நவம்பர் மாதம் நான் ஆட்சிக்கு வந்தால் மெக்சிகோவுடனான தெற்கு எல்லையை மூடுவதற்கு தயங்கமாட்டேன். இதற்காக நான் சர்வாதிகாரியாகவும் மாறுவேன்" என்று கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பவே, நகைச்சுவவைக்காக அப்படி கூறியதாக சமாளித்துவிட்டார்.
இப்படி இருக்கையில் தற்போது கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியை குறி வைத்து டிரம்ப் பேசியிருப்பதும், அதற்கு எதிராக கமலா ஹாரிஸ் தரப்பு விமர்சித்திருப்பதும் அமெரிக்காவில் விவாதங்களை கிளப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications