சாத்தான்குளம் காவல் மரணங்கள்-மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கடும் கண்டனம்
நியூயார்க்: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்துக்கு வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடந்த வாரம் ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் தமிழக காவலர்கள் சிறையில் அடித்தே கொலை செய்திருப்பது மனிதத்தன்மை அற்ற செயலாகும். அச்செயலை வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மினசோட்டாவில் ஜார்ஜ் பிளாய்ட் காவலர் ஒருவரால் கொல்லப்பட்ட (மே 25) செய்தி உலகமெங்கும் பரவி, அனைத்து நாடுகளிலும் தொடர் போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் சார்பாக பறையிசைத்து அவர் இறந்த இடத்தில் நமது கண்டனத்தையும், நினைவேந்தலையும் தெரிவித்தோம்.
சாத்தான்குளம் காவல்துறையின் இரட்டை படுகொலைகள் குறித்து சீமானின் சரமாரி கேள்விகள்
அந்த காய வடு மறைவதற்கு முன்பே அதைவிட கொடிய வகையில் தமிழ்நாட்டில் நடந்த இப்படியொரு கொடுஞ் செயல் மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ்நாடு அரசு, அந்தக்குற்றச் செயலில் ஈடுபட்ட அனைத்துக் காவலர்களையும் விசாரித்து அவர்களுக்குத் தகுந்த தண்டனையை வழங்குமாறும், இனியும் இது போல் வரும் காலங்களில் குற்றச் செயல்கள் தொடராமல் இருக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.