இன்று பூமியை நெருக்கமாக கடக்கும் 3 விண்கற்கள்.. கொஞ்சம் பிசிறு தட்டினாலும் மொத்தமும் காலி!
நியூயார்க்: விண்கற்கள் மூலம் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், இன்று பூமிக்கு நெருக்கமாக 3 விண்கற்கள் கடந்து இருப்பதாக நாசா கூறியுள்ளது.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, “நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது” என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்களால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. இந்நிலையில், இன்று பூமிக்கு நெருக்கமாக 3 விண்கற்கள் பறந்து செல்ல இருப்பதாக, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
முதல் விண்கல் 2024 QM1. இது சுமார் 63 அடி விட்டம் கொண்டிருக்கும். அதாவது ஒரு வீட்டின் அளவு இருக்கும். இது தோராயமாக 18 லட்சம் கி.மீ தொலைவில், 60 ஆயிரம் கி.மீ வேகத்தில் பூமியை கடந்து செல்ல இருக்கிறது.
இரண்டாவது விண்கல் 2024 QK1. இது சுமார் 96 அடி விட்டம் கொண்டது. இது 31 லட்சம் கி.மீ தொலைவில், இது எந்த அளவு வேகத்தில் பயணிக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லை.
மூன்றாவது விண்கல், 2021 JT. இது தோராயமாக 38 அடி விட்டம் கொண்டது. இந்த மூன்று விண்கற்களில் இதுதான் சிறியது. அதேபோல பூமியை கடந்து செல்லும் தூரமும் அதிகமாகும். அதாவது 62 லட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறது. மற்ற விண்கற்களை விட இது மெதுவாக பயணிக்கிறது.
இப்படி பயணிக்கும் விண்கற்களின் பாதையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு, திடீரென எதிர்பாராத விதமாக பூமியை தாக்கினால், அது விழுந்த இடத்தில் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும். அதாவது, 8 சக்திவாய்ந்த அணுகுண்டு ஒரே இடத்தில் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ, அந்த அளவுக்கு இந்த விண்கற்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விண்கல் விழுந்த இடத்தில் 2 கி.மீ அகலத்திற்கும், 1 கி.மீ ஆழத்திற்கும் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும்.
மட்டுமல்லாது விண்கல் விழுந்த இடத்தை சுற்றி 16-24 கி.மீ பரப்பளவுக்கு எல்லாம் தரைமட்டம் ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த அளவுக்கு பாதிப்புகள் முதல் இரண்டு விண்கற்கள் விழுந்தால்தான் ஏற்படும். மூன்றாவது உள்ள விண்கல் சிறியது என்பதால், மேற்குறிப்பிட்டதைவிட குறைந்த பாதிப்புதான் ஏற்படும்.












Click it and Unblock the Notifications