சூடாகும் கடல்.. பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
நியூயார்க்: கடல் வேகமாக சூடாகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக புவி வெப்பமயமாதல் இருப்பதாகவும், கடல் இப்படியே சூடானால், ஒரு கட்டத்தில் பூமி பாலைவனமாகிவிடும் என்றும் கூறியுள்ளனர்.
என்னதான் பூமியின் 71% நிலப்பரப்பை கடல் சூழ்ந்து இருந்தாலும், கடலில் உள்ள நீரின் அளவு குறைவுதான். பூமி சூடானால் இந்த தண்ணீர் எல்லாம் ஆவியாகி, இந்த கிரகம் உயிர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக மாறிவிடும். அதற்கான தொடக்க புள்ளிதான் இப்போது நடந்திருக்கும் நிகழ்வு. அதாவது கடந்த 1980களை விட, 2023ல் கடலின் வெப்பம் 4 மடங்கு அதிகரித்திருக்கிறது.

'Environmental Research Letters' எனும் அறிவியல் இதழில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 1980ம் ஆண்டு வரை கடலின் வெப்பம் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 0.06 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து வந்தது. அதாவது 0.06 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடல் சூடாகி மீண்டும் குளிர்ந்துவிடும்.
ஆனால் 1980க்கு பின்னர் 0.27 டிகிரி செல்சியஸ் அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக 2019-2023 ஆண்டுகளுக்கு இடையில் கடலின் வெப்பநிலை வேகமாக அதிகரித்துள்ளது. இதன் அர்த்தம், பூமி வேகமாக சூடாகி வருகிறது என்பதுதான்.
பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் கிறிஸ் மெர்ச்சன்ட் இதனை உறுதி செய்திருக்கிறார். பூமி குளியல் தொட்டியை போன்றது. அதிலிருக்கும் நீர் வேமாக சூடானால், பூமியில் எதுவுமே இருக்காது என்று கூறியுள்ளார். கடல்கள் வேகமாக சூடாவதற்கு காரணம் புவி வெப்பமயமாதல்தான். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதால் புவி வெப்பமாகிறது.
நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் பூமிக்கு சில பண்புகள் இருக்கிறது. சூரியனிடமிருந்து எவ்வளவு வெப்பத்தை பூமி வாங்குகிறதோ, அதே அளவுக்கு வெப்பத்தை அப்படியே வெளியேற்றிவிடும். இதனை 'ஆற்றல் வழி சமநிலை' (balance in the way energy) என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சில பத்து ஆண்டுகளாக பூமியிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பம் குறைந்திருக்கிறது. அதாவது இந்த சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு சமநிலையற்ற நிலை (Imbalance in the way energy) உருவாகியுள்ளது.
இதனால் பூமியில் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனில் பதிவான அதிக வெப்பத்தை பற்றி எல்லோரும் கேள்விபட்டிருப்போம். பிரிட்டன் நாடு அடிப்படையில் குளிர் பிரதேசமாகும். ஆனால் நம்மூர் சென்னையில் அடிப்பதை போல வெயில் அங்கு போட்டு தாக்கியது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாது, வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. காட்டு தீ பரவியது.
அதேபோல பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பற்றியும் நமக்கு தெரிந்திருக்கும். இந்த வெள்ளம், நூற்றுக்கணக்கான உயிர்களை கொன்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தான் வளர்ந்து வரும் நாடு என்பதால், அந்நாட்டில் பெரிய பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இது எல்லாவற்றிற்கும் காரணம் சமநிலையற்ற ஆற்றல் (Imbalance in the way energy) உருவாக்கிய காலநிலை மாற்றம்தான்.
இதனால் பூமிக்கு கூட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. திடீரென இமயமலை உரு தெரியாமல், அழிந்து போகலாம். மலையில் உள்ள மொத்த பனி பாறைகளும் உருகி ஆறாக ஓடலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications