ஆடு வளர்ப்பது அழகு பார்க்க கிடையாது.. பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்த டிரம்ப்!
நியூயார்க்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சமீபத்தில் ரூ.3000 கோடி அளவுக்கு நிதி உதவியை செய்திருந்தது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை பிறப்பித்திருக்கிறார்.
நான் அதிபராக தேர்வானால், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்துவேன் என டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார். தற்போது அதிபராகியுள்ளதால், தனது வாக்குறுதியை அமல்படுத்த தொடங்கியிருக்கிறார்.

அதன்படி தற்போது 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியல் 3-ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் லிஸ்டில் அஃப்கானிஸ்தான், ஈரான், சீரியா, கியூபா, வட கொரியா என 10 நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளிலிருந்து யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது. அவர்களுக்கு விசா அனுமதி வழங்கப்படாது.
2வது பட்டியலில் எரிட்ரியா, ஹைத்தி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் என 5 நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதனால் மாணவர்கள், சுற்றுலா செல்பவர்கள் கூட பாதிக்கப்படலாம்.
3வது லிஸ்ட்டில் பாகிஸ்தான், பூடான், மியான்மர் என 26 நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகள் 60 நாட்களுக்குள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் விசா சோதனை தொடர்பான கோரிக்கைகளை பூர்த்தி செய்யாவிட்டால், 2வது பட்டியலில் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் விசா நெருக்கடியை இந்த நாடுகளும் எதிர்கொள்ளும்.
இந்த நாடுகளின் பட்டியல்கள் இறுதியானவை கிடையாது. இதிலிருந்து சில நாடுகள் நீக்கப்படலாம். அல்லது சில சேர்க்கப்படலாம் என டிரம்ப் தெரிவித்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பில் முரண்பாடு உள்ள விஷயம் என்னவெனில், கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.3000 கோடியை கொடுத்திருந்தது. இந்த உதவி மூலம், பாகிஸ்தான்-அமெரிக்கா உறவு வலுவாக இருப்பதாக பேசப்பட்டடு வந்தது. ஆனால், இன்று வெளியாகியுள்ள பயண தடை பட்டியலில் பாகிஸ்தான் பெயரும் இடம்பெற்று இருக்கிறது. ஆடு வளர்ப்பது அழகு பார்க்க கிடையாது.. அறுப்பதற்குதான் என்கிற பழமொழி இந்த விஷயத்திற்கு சரியாக பொருந்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து வெளியுறவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பக்கத்து நாடுகளுக்கு அதிக வரி விதிப்பது, புலம்பெயர் இந்தியர்களை வெளியேற்றுவது, சட்டவிரோதமாக நுழையும் மற்ற நாட்டவர்களை குற்றவாளியை போல சித்தரித்து நாடு கடத்துவது என தொடர் சர்ச்சையில் டிரம்ப் சிக்கியிருக்கிறார். இப்படி இருக்கையில் தற்போது பயண தடை குறித்தும் அறிவிப்பு வெளியாகியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications