பாகிஸ்தானுக்கும் பேச வாய்ப்பு வழங்குவதே அவமானம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொதித்த இந்தியா
நியூயார்க்: ‛‛பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாத தாக்குதல்களால் கடந்த பல தசாப்தங்களாக இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பாகிஸ்தானை பங்கேற்று பேச செய்வது என்பதே அவமானதாகும்'' என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான நம் நாட்டின் நிரந்தர பிரதிநிதியும், தூதருமான ஹரிஷ் பூரி அனல் தெறிக்க பேசினார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலில் நேற்று பாகிஸ்தானை நம் நாடு கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான விவாதம் என்பது நேற்று நடந்தது. இந்த விவாதத்தில் நம் நாட்டுக்கான நிரந்தர பிரதிநிதி தூதரான ஹரிஷ் பூரி பேசி பாகிஸ்தானை கதறவிட்டார். ‛‛ஆயுத மோதலின்போது பொதுமக்களை பாதுகாத்தல்'' என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் ஹரிஷ் பூரி பேசியதாவது:
எங்களின் எல்லைகளில் பாகிஸ்தானால் ஆதரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் இந்தியா தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இப்படியான ஒரு நாடு (பாகிஸ்தான்) பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பங்கேற்பது என்பது சர்வதேச சமூகத்துக்கு அவமானமாகும். பயங்கரவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் பார்க்காத ஒரு நாடு மக்களின் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும், உரிமையும் இல்லை.
கடந்த 2008ல் மும்பையில் நடத்தப்பட்ட பயங்ரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டவை. இப்படிப்பட்ட பயங்கவரவாதிகளை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்துார் திட்டத்தை செயல்படுத்தியது.
இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களை தாக்கியது. அங்குள்ள மததலங்களையும், பொதுமக்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. குருத்வாராக்கள், கோவில்கள், மடங்கள், மருத்துவ வசதி உள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 20 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்த நிலையில் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இப்படியான பாகிஸ்தான் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவது என்பது பாசாங்குத்தனமானது'' என கடுமையாக சாடினார்.
முன்னதாக நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை பாகிஸ்தான் ஐநா வரை கொண்டு சென்றது. அப்போது பாகிஸ்தான் பிரதிநிதி நம் நாட்டின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ‛‛போர் என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் போது, பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்'' என்று கூறியிருந்தார். நம் படைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து அழித்த நிலையில் பாகிஸ்தான் பிரதிநிதி இப்படி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு தான் தற்போது நம் நாடு பதிலடி கொடுத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications