தலையில் விழ காத்திருக்கும் விண்வெளி குப்பைகள்! தப்பிக்குமா பூமி? விஞ்ஞானிகள் அச்சம்!
நியூயார்க்: ஒவ்வொரு முறை ராக்கெட்கள் ஏவப்படும் போது, அது குறிப்பிட்ட அளவுகளில் குப்பைகளை விண்வெளியில் உருவாக்குகிறது. இந்த குப்பைகள் பூமி மீது மோதும் அபாயம் எழுந்திருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி நாம் நினைத்து பார்ப்பதை விடவும் மிகவும் பெரியது. இதனை புரிந்துக்கொள்ளவும், வானிலை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காகவும் நாம் தொடர்ந்து செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறோம். இவை பூமியை ஒட்டியுள்ள சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இங்கு பூமியின் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும். எனவே செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வரும். ஆனால் செயற்கைக்கோள்களை ராக்கெட்களில் ஏவப்படும்போதெல்லாம் விண்வெளியில் குப்பைகள் சேர்ந்துவிடுகின்றன.

விண்வெளி குப்பைகள்: ராக்கெட்டை ஏவும்போது அதன் பாகங்கள் ஒவ்வொன்றாக கழன்று விழும். இப்படி விழும் பாகங்கள் குப்பைகளாக மாறுகிறது. அதேபோல செயற்கைக்கோள்களைச் சுற்றியுள்ள ஓடுகளும் (Launch Fairings) விண்வெளி குப்பைகளாக மாறிவிடுகிறது. இது தவிர செயல்படாமல் இருக்கும் செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி மையங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் உடைந்த உபகரணங்கள் ஆகியவையும் குப்பைகளாக பூமியை சுற்றி வருகின்றன.
அதிகரிக்கும் குப்பைகள்: இப்படி சுற்றி வரும் குப்பைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி, சிறிய துகள்களாக பெரும் குப்பைகளாக மாறுகிறது. இந்த குப்பைகள் மேகக்கூட்டம் போல பூமியை வலம் வந்துக்கொண்டிருக்கின்றன. இவை பல வகைகளில் நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. முதல் அச்சுறுத்தல் ராக்கெட்டை ஏவும்போது ஏற்படும் இடையூறுகள்தான். அதாவது இந்த குப்பை மேகக்கூட்டம் பாதுகாப்பான தூரத்தில் விலகி இருக்கிறதா? என்பதை உறுதி செய்த பின்னர்தான் ராக்கெட் ஏவப்படும்.
மனிதர்களுக்கு பாதிப்பு: இரண்டாவதாக மனிதர்களுக்கு இந்த குப்பைகள் கடும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதாவது, தேமே என சுற்றிக்கொண்டிருக்கும் இந்த குப்பைகள் சில நேரங்களில் வழி தவறி பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்து விடுகின்றன. வழி தவறினாலும் சரியாக இது பூமியை நோக்கி வந்துவிடுகின்றன. இவற்றில் பெரும்பாலும் எரிந்து சாம்பலாகி விடும். சில எரியாமல் மனிதர்களின் தலை மீது விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சோகம் என்னவெனில் எந்த குப்பை எப்போது எங்கு விழும் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்பதுதான்.
பூமிக்கு ஆபத்து: மனிதர்கள் மீது விழுவதையும் தாண்டி, அணைகள், அணுமின் நிலையங்கள், வெடிபொருள் கிடங்குகள் மீது விழுந்தால் பூமிக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். இதில் இன்னொரு சிக்கல் என்னவெனில், ரஷ்ய நாட்டை சேர்ந்த விண்வெளி குப்பைகள் அமெரிக்காவிலோ, அமெரிக்காவின் விண்வெளி குப்பைகள் வடகொரியாவிலோ விழுந்தால் உலகப்போரே வெடித்துவிடும் என்பதும் கவனிக்கத்தக்கது.
எப்படி தடுப்பது?: இதனை தடுக்க மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை வடிவமைக்கலாம். அதாவது ஒரு செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் எனில், 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தன்னைதானே அழித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கலாம். அல்லது, முழுமையாக எரிந்து சாம்பலாகும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். அதாவது தனது ஆயுள் காலத்திற்கு பிறகு பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எரிந்து சாம்பலாகிவிட வேண்டும். இப்படி வடிவமைத்தால் மனிதர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் இதையெல்லாம் உலக நாடுகள் செய்யுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.












Click it and Unblock the Notifications