பிளாஷ்பேக் 2018.. உலக அரசியலை கலக்கிய முக்கிய சந்திப்புகள்.. ஒரு பார்வை!
நியூயார்க் : 2019ம் ஆண்டை எதிர்நோக்கியுள்ள இந்த உலகத்தில் நிகழ்கால அரசியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்தகால அரசியல் நிகழ்வுகள் நமது மனதை விட்டு அகலாமல் உள்ளன. பின்னோக்கி பார்ப்பது என்பது உலக அரசியலில் குறிப்பிடத்தக்க ஒன்று.
அவ்வாறான அம்சங்களிலும் செய்திகளிலும் முக்கிய இடத்தை பிடித்திருப்பது அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு. உலக அரசியலில் எலியும், பூனையுமாக இன்றளவும் அரங்கேறி கொண்டிருப்பது அமெரிக்கா, வடகொரியா இடையேயான அரசியல் நிலைப்பாடு தான்.
இந்த இரு நாடுகளின் உறவுகள், அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாளையும் வரும் என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட அரசியல் சதுரங்க விளையாட்டை கொண்ட இந்த இரு துருவங்களும் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி சந்தித்து கொண்டது சர்வதேச அரசியலின் பார்வையை கூர் தீட்டியது.
கிம்மை சந்தித்த டிரம்ப்
பல்வேறு விதமான நிலைப்பாடுகள், எதிர்பார்ப்புகள் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம் ஜோங் உன் சந்திப்பு அரங்கேறியது. சிங்கப்பூரில் உள்ள சென்டோசா பகுதியில் உள்ள கேப்பெல்லா ஓட்டலில் இருவரும் சந்தித்து கொண்டனர். சிங்கப்பூரில் ட்ரம்பும் கிம்மும் சந்தித்துப் பேசிய பிறகு, கொரிய தீபகற்பத்தில் நிலைமை பெரிதும் முன்னேறியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வட கொரியாவின் ஆணவப் பேச்சும் அது ஏவும் ஏவுகணைகள் ஜப்பான் அருகே கடலில் விழுவதும் குறைந்துள்ளது.
ஜனவரியில் சந்திக்க வாய்ப்பு
அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் இருவரும் அடுத்தாண்டு ஆரம்பத்தில் 2வது முறையாக சந்தித்துப் பேச தற்போது வாய்ப்பு உருவாகி உள்ளது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் இது நடக்கலாம். எப்படியும் ஜூலைக்குள் சந்திப்பு நடக்கும்.
இணைவதற்கான பேச்சுவார்த்தை
கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த முதல் சந்திப்புக்குப் பிறகு, கடந்த 6 மாதங்களாக அமெரிக்கா, வட கொரியா இடையே காரசாரமான கருத்து மோதல்கள் எதுவும் நடக்கவில்லை. இதனால் கொரிய தீபகற்பத்தில் நல்லது நடப்பதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு, வட கொரியாவும் தென் கொரியாவும் மீண்டும் இணைவதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கும் அளவுக்கு அங்கு பதற்றம் குறைந்திருப்பதால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றன.
ஜிங்பின்னை சந்தித்த மோடி
அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்புக்கு இணையாக பேசப்பட்டது பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிங்பின் சந்திப்பு. இருதரப்புப் பேச்சு வார்த்தைகளில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்து வதற்கான வரைவு மாதிரிகளை உருவாக்க பேச்சு வார்த்தை நடத்தினர். சீனாவின் வூஹானில் இருவரிடையேயான இந்தச் சந்திப்பு இருதரப்பு உறவுகளில் இருந்து வந்த சிக்கல்கள், இடுக்கு முடுக்குகளைக் களைவதாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இருநாடுகள் இடையேயான உறவு
டோக்ளாம் முதல் சிலபல சில்லரைப் பிரச்சினைகளில் இந்திய-சீன உறவுகளுக்கிடையே பெரிய பிரச்சினைகள் இருந்தது. தற்போது இந்தச் சந்திப்பு மற்றும் உடன்படிக்கைகள் மூலம் வலுவான நேர்மறையான இருதரப்பு உறவுகளுக்கு வித்திடும் என்று இரு தரப்பினருமே நம்பிக்கை வைத்துள்ளனர்.
விலகிய அமெரிக்கா
உலக அரசியலில் அனைவர் கவனத்தையும் உற்று நோக்க வைத்தது ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கைதான். ஈரானுடான அந்த ஒப்பந்தம் என்பது தற்போதைய நிலையில் ஈரானுடனான ஒருங்கிணைந்த செயல் திட்டத்திலிருந்து அமெரிக்கா விலகுவது என்பதாகும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை என்பது உலக அளவில் சில சந்தை ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.
விலகும் அமெரிக்கா
ஆனால் அமெரிக்கா அதிலிருந்து விலக மட்டுமே முடியும், மற்ற நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ரஷ்யா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டதாகவே உள்ளன என்பது சற்றே யோசிக்க வேண்டிய விஷயம்.
பிரெக்சிட் வாக்கெடுப்பு
அடுத்து உலகளவில் பிரெக்ஸிட் என்றழைக்கப்படும் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை. அதேநேரத்தில், பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளு மன்றத்தின் அனுமதியின்றி எவ்வித முடிவும் எடுக்கக்கூடாது என்று தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
பிரிட்டன் முன்னேறும்
அப்போது இதுகுறித்து பேசிய தெரசா மே, பிரெக்ஸிட் விவகாரத்தில் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து முன்னேறி செல்லும் என்று உறுதிபட தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள பிரிட்டன் அந்த கூட்டமைப்பில் இருந்து வரும் 2019 மார்ச் 29-ம் தேதி வெளியேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை ஒப்பந்தம்
அடுத்து இந்தியாவானது நட்புநாடான ரஷ்யாவிடம் இருந்து 5.43 மில்லியன் டாலரில் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கும் நடவடிக்கையாகும். அக்டோபர் 5ம் தேதி அதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே நடைபெற்ற போது உலக நாடுகள் ஒருகணம் திகைத்து தான்போயின. டெல்லி வந்த அந்நாட்டு அதிபர் புடினுடனான இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் புறந்தள்ளிவிட்டு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டை பெற்றது எனலாம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
அடுத்து பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஜூன் 9ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்து கொண்டு கையெழுத்திட்டதாகும். 18வது உச்சி மாநாட்டில் ஆசியாவின் சக்தி வாய்ந்த இவ்விருநாடுகளின் பங்கேற்பு உலக நாடுகளை சற்றே ஆச்சரியப்படுத்தியது. மக்கள்தொகை, பரஸ்பர ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் இந்த சந்திப்பும், உடன்படிக்கையும் உலக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றன.