சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப மேலும் 2 வாரங்கள் ஆகலாம்! நாசா வட்டாரத்தில் கசிந்த தகவலால் ஷாக்
நியூயார்க்: ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவர் சென்றிருக்கும் நிலையில், அவர் பூமிக்கு திரும்ப மேலும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித குல வரலாற்றில் விண்வெளி ஆய்வுகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன. எனவே இந்த ஆய்வுகளுக்கு சர்வதேச நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. உலக அளவில் விண்வெளி துறையில் பல தொடர் சாதனைகளை செய்து நாசா கொடி கட்டி பறந்து வருகிறது. வழக்கமாக தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளி வீரர்களை அழைத்து சென்று பூமிக்கு திரும்பும் நாசா, இந்த முறை தனியார் ராக்கெட்களுக்கு அனுமதி வழங்கியது.

அந்த வகையில் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் தனித்துவமான ராக்கெட்டையும் அதனும் 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இது சுனிதா வில்லியம்ஸ்ஸுக்கு மூன்றாவது பயணமாகும்.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் கடந்த 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி அதாவது நேற்று இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்றும் இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் மற்றும் ஹீலியம் வாயு கசிவு ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும்.
இதனையடுத்து ஜூலை 2ம் தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள் என போயிங் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பூமிக்கு திரும்புவது மேலும் 2 வாரங்களுக்கு தாமதமாகலாம் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறது. எப்படியாயினும் கல்பனா சாவ்லா போல எந்த விபத்திலும் சிக்காமல் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக திரும்ப வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications