சக மாணவர்களைக் கொன்று ரத்தம் குடிக்க திட்டமிட்ட 2 சிறுமிகள்.. அமெரிக்காவில் பயங்கரம்!
பள்ளியில் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்கப் பள்ளி ஒன்றில் சகமாணவர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தைக் குடிக்க இரண்டு பள்ளிச் சிறுமிகள் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மத்திய புளோரிடா பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளியில், கடந்த செவ்வாயன்று இரண்டு மாணவிகள் கழிப்பறையில் பதுங்கி இருப்பதாக சக மாணவிகள் மூலம் ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள், அச்சிறுமிகள் இருவரையும் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் கத்திகளை மறைத்து வைத்திருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை முயற்சிக்காக அவர்கள் கத்தி வைத்திருந்தனரோ என்ற சந்தேகத்தில், அவர்களிடம் ஊழியர்கள் விசாரணை நடத்தினர். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, சம்பந்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் மனித ரத்தம் குடிக்க விரும்பியுள்ளனர். அதற்காகத் தான் பள்ளிக்கு அவர்கள் கத்தியும் வந்துள்ளனர். உடன் படிக்கும் சக மாணவர்களின் குரல்வளையை அறுத்து, அவர்களைக் கொலை செய்து அவர்களின் ரத்தத்தைக் குடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், அவர்களின் சதையை கடித்து தின்ன விரும்பியதாகவும், அதன் பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சிறுமிகளைக் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிகளின் மனநிலை குறித்த சோதனைகளையும், சிகிச்சையையும் மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.
ஏன் அம்மாணவிகளுக்கு இது போன்ற விபரீத ஆசை ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.