பிபி, சுகர்.. அமெரிக்காவில் நுழைய ஆப்பு வைத்த ட்ரம்ப்! உடனடியாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்! ஷாக்!
நியூயார்க்: அமெரிக்கா அரசாங்கம் வெளிநாட்டினருக்கான விசா விதிகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, இதய நோய், சுவாசக் கோளாறு, நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், புற்றுநோய், நரம்பியல் பாதிப்பு மற்றும் மனநிலை குறைபாடு போன்ற உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இனி அமெரிக்க விசா வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, குடியேற்றக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையடைந்துள்ளன. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தியது அமெரிக்கா.

அதோடு, வெளிநாட்டு பணியாளர்களுக்கான H-1B விசா கட்டணமும் ரூ.1.32 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சம் வரை உயர்த்தப்பட்டு, வெளிநாட்டவர்களின் நுழைவை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா விசா
இப்போது, உடல்நலக் கோளாறு கொண்டவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்ற புதிய உத்தரவு, ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கட்டுப்பாட்டை இன்னும் கடுமையாக்கி விட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல்படி, சுற்றுலா, மாணவர், வணிக விசா பெற்று நுழையும் வெளிநாட்டினர், உடல்நிலை பாதிப்பு காரணம் காட்டி நீண்டகாலம் அமெரிக்காவில் தங்குகின்றனர். இதனால், அவர்கள் அமெரிக்க அரசின் மருத்துவ நிதி திட்டங்களிலிருந்து பலன்கள் பெறுகிறார்கள். இதனால், அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாட்டவர்களின் சிகிச்சைக்கு செலவாகிறது என அரசு குற்றம் சாட்டியுள்ளது.
உடல்நலக் கட்டுப்பாடு
இதையடுத்து, தீவிர அல்லது நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்ற உத்தரவை அமெரிக்க வெளியுறவுத் துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. மேலும், இனிமேல் விசா விண்ணப்பதாரர்களின் உடல்நிலை, வயது, நிதி நிலைமை, தொற்று நோய் அபாயம் போன்றவை பற்றிய முழுமையான விசாரணை நடத்தப்படும். தற்போது பெரும்பாலான தூதரகங்களில் மருத்துவர் நியமனம் இல்லை. எனவே, விசா அதிகாரிகளே விண்ணப்பதாரர்களிடம் உடல்நிலை தொடர்பான கேள்விகளை எழுப்புவார்கள். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
விசா மறுப்பு
முன்பு காசநோய் மற்றும் எச்ஐவி போன்ற நோய்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டன; ஆனால் இனிமேல் அனைத்து முக்கிய நோய்களும் பரிசோதனை பட்டியலில் சேர்க்கப்படும். அமெரிக்காவுக்கு சென்ற பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபர் தானாகவே மருத்துவச் செலவை ஏற்க வேண்டும். அரசாங்கம் எந்த வகையிலும் உதவி வழங்காது என்பதும் புதிய விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் வந்தபின், அவர்களில் பெரும்பாலோரின் கனவு நனவாகவில்லை.
ஐடி நிபுணர்கள்
தற்போது நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சனை இருந்தாலே விசா மறுக்கப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஐ.டி. நிபுணர்கள், மாணவர்கள், தொழில் அதிபர்கள் பலரும் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணிபுரியும் மென்பொறியாளர்களில் மூன்றில் ஒருவர் இந்தியர் என்பதால், இந்த புதிய விதி இந்திய குடும்பங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியினர்
அதிபர் ட்ரம்பின் புதிய நடவடிக்கை குறித்து இந்திய வம்சாவளியினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். "இது மனிதாபிமானம் இல்லாத சட்டம்; உடல்நிலை ஒரு குற்றமல்ல" என்று அவர்கள் கூறியுள்ளனர். பல சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள், இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் தயாராகி வருகின்றன.












Click it and Unblock the Notifications