சூடான ஈரான்! அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மிகப்பெரிய தாக்குதல்.. இஸ்ரேலுக்கு வார்னிங்!
நியூயார்க்: ஹிஸ்புல்லா கமாண்டர் கொலை, அதை தொடர்ந்து, ஹமாஸ் தலைவர் படுகொலை போன்றவை ஈரானை கொந்தளிப்படைய செய்திருக்கிறது. எனவே அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் பலியானார்.
இதற்கு அடுத்த நாளே ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது. ஹமாஸில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பலர் இருந்தாலும், இஸ்மாயில் ஹனியே மிதவாதியாக அறியப்படுகிறார். இவருடைய குழந்தை பருவம் அகதிகள் வாழ்க்கையிலிருந்துதான் தொடங்கியது. ஹமாஸின் மற்ற தலைவர்களுடன் ஒப்பிடாமல், இவரை காசா மக்கள் தனி மரியாதையுடன் பார்த்து வந்தனர். குறிப்பாக போரை நிறுத்த இவர் மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தையில் காசா மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.
இப்படி இருக்கையில் இவரது படுகொலை, மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஐநாவும், மத்திய கிழக்கின் நட்பு நாடுகளும் பாலஸ்தீன போர் நிறுத்தம் குறித்து ஹமாஸிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இதன் விளைவாக போர் நிறுத்தம் ஏறத்தாழ சாத்தியமாகும் நிலையில் இருந்தது. இப்படி இருக்கையில், மேற்குறிப்பிட்ட இரண்டு படுகொலைகள் லெபனான், பாலஸ்தீனம் மற்றும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளன.
எனவே லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு, அங்குள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதில், "லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பொதுவெளியில் நடமாட்டத்தை குறைக்க வேண்டும். அவசர தேவை எனில் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல இஸ்ரேலில் உள்ள இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஜி 7 நாடுகளின் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications