அமெரிக்க அதிபர் தேர்தல்.. டார்கெட் செய்யப்படும் ட்ரம்ப்? வாயை விட்ட எலான் மஸ்க்! பறந்து வந்த கண்டனம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறி உள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது கொலை முயற்சி சம்பவங்கள் கூட நடைபெறாதது ஏன்? என எலான் மஸ்க் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடக்க இருக்கிறது.

தற்போது ஆளும் அதிபரான ஜோ பைடன் வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்கள் காரணமாக தேர்தலில் இருந்து விலகிக் கொண்ட நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
எதிர்க் கட்சியான குடியரசு கட்சி சார்பில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் இறங்கி இருக்கிறார். சிகாகோவில் நடந்த மாநாட்டில் முறைப்படி அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விவாதம், பிரச்சாரம் என அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சுடுபிடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸே முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.
வாஷிங்டன் போஸ்ட், ஏபிசி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கும் நிலையில், கமலா ஓரளவு செல்வாக்குடன் முதலிடத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கிறார் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க். மேலும் எக்ஸ் வலைதளத்தை வாங்கி இருக்கும் அவர் தொடர்ந்து ட்ரம்புக்கு ஆதரவாக அதில் பதிவிட்டு வருகிறார். மேலும் டொனால்டு டிரம்புக்கு பெரிய அளவில் நிதி உதவி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபரும் தற்போதைய வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கு பெரிய ஆபத்து இரு சமயங்களில் நிகழ்ந்தது. முன்பு பிரச்சாரத்தின் போது ஒருவர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் அவரது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் பயிற்சி மேற்கொண்ட போது திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பென்சில்வேனியா பொதுக் கூட்டத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக வலை தளத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன் என ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான எலான் மஸ்க் பதிலளித்திருந்தார்,
அதில் ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸ் மீது கொலை முயற்சி கூட யாரும் செய்யவில்லையே? என ட்வீட் செய்தார். இதற்கு கடுமையான கண்டனங்கள் கிளம்பிய நிலையில் அந்த போஸ்ட்டை அவர் டெலிட் செய்திருந்தார். மேலும் விளையாட்டுத் தனமாக தான் அப்படி சொன்னதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது, அதில்,"அமெரிக்க நாட்டில் வன்முறைக்கு இடமே இல்லை என அதிபர் ஜோ பைடனும் துணை அதிபர் கமலாவும் தெரிவித்து இருக்கின்றனர். வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. அது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. அதனை ஊக்குவிக்கவோ கேலி செய்யவோ கூடாது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஆண்ட்ரூ பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு எதிரான கொலை முயற்சிகள் இல்லாதது குறித்து எலான் மஸ்க் ட்வீட் செய்ததை விசாரித்து வருவதாக அமெரிக்க ரகசிய சேவை ( The US Secret Service ) தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications