ஈரான் மேட்டரை விடுங்க.. இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்! வெளியான ஷாக் அறிக்கை!
நியூயார்க்: ஈரான் போர் குறித்து இந்தியாவில் பெரும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், இந்த மேட்டரை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு மற்றொரு விஷயத்தை அமெரிக்கா கிளப்பிவிட்டிருக்கிறது. 'இந்தியாவின் மத சுதந்திரம்' என்கிற தலைப்பில் அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கை தற்போது பேசு பொருளாகியுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையின மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களை மெய்ப்பிக்கும் வகையில், வட மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டும் வருகிறது. சமீபத்தில் கூட, மாட்டிறைச்சியை கடத்தியதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயிலில் வைத்து முஸ்லிம் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார். சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம் என்று வைத்துக்கொள்ளலாம்.

மதத்தின் பெயரிலும், மாட்டின் பெயரிலும் நடத்தப்படும் வன்முறைகள் குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இப்படி இருக்கையில் இந்த விஷயம் குறித்து அமெரிக்காவே வெளிப்படையாக பேசியிருப்பது, விவாதங்களை தூண்டியிருக்கிறது.
அதாவது, சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷன் ( USCIRF ) இது குறித்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், நடப்பாண்டில் சிறுபான்மை தனிநபர்கள் மீதான தாக்குதல், கொலைகள், குடியிருப்புகளை இடித்தல், மத தலைவர்களின் கைது போன்றவை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படியான நிகழ்வுகள் மத சுதந்திரத்தை கடுமையாக மீறுவதாக இருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது.
மத சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வன்முறையை தூண்ட, வெறுப்பு பேச்சும், தவறாக பரப்பப்படும் தகவல்களே காரணம் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியிருக்கிறது. பொது சிவில் சட்டம், பசு வதை சட்டம், மதமாற்ற தடை சட்டம், சிஏஏ போன்ற சட்டங்கள் சிறுபான்மை மதத்தினரை குறி வைக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா விமர்சித்திருக்கிறது.
இறுதியாக, இந்தியா மத சுதந்திரத்தை அங்கீகரித்து நடந்துக்கொள்ள வேண்டும் என்றும், அதனை மீறும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படியான குற்றச்சாட்டுகளை, நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எதிர்கட்சிகள் எழுப்பும் போதெல்லாம், மத்திய அரசு இதை கடுமையாக மறுத்து வந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்தியாவின் நட்பு நாடாக உள்ள அமெரிக்காவே இதை வெளிப்படையாக கூறியிருப்பது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications