டிரம்ப் வரி விதிப்பால் எந்த நாட்டுக்கு அதிக பாதிப்பு? இந்தியாவுக்கு எந்த இடம்? டாப் 15 பட்டியல் இதோ
நியூயார்க்: பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்துள்ளார். இன்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி என்பது விதிக்கப்பட உள்ள நிலையில் டிரம்ப் வரி விதிப்பால் அதிகமாக பாதிக்கப்படும் நாடு எது என்பது பற்றி ‛டாப்' 15 லிஸ்ட் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வரிகளை விதித்து வருகிறார். Reciprocal Tariff என்ற பெயரில் பதிலடி வரிகளை விதித்து வருகிறார்.

அதாவது ஒவ்வொரு நாடுகளும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிகளை விதிக்கின்றன. அதேபோல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாடு வரிகளை விதித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவை விட பிற நாடுகள் தான் அதிகமான வரிகளை விதிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதோடு அங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது என்று டிரம்ப் கூறினார். இதனை சரிசெய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக கூடுதல் வரி என்பது விதிக்கப்படும். அமெரிக்காவின் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் அதற்கு நிகராக பிற நாடுகளுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி முதற்கட்டமாக கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிக வரிகளை விதித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று முதல் இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு கூடுதல் வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்க உள்ளார். வரி விதிப்பை முன்வைத்து டொனால்ட் டிரம்ப் இன்றைய தினத்தை அமெரிக்காவின் விடுதலை நாள் என்று கூறியுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் வர்த்தக போர் என்பது தொடங்கும் நிலை உருவாகி உள்ளது.
தற்போது வரை எந்தெந்த நாடுகளுக்கு டிரம்ப் எவ்வளவு வரியை உயர்த்துகிறார்? என்ற விபரம் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த வரி விதிப்பு என்பது அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையின் அடிப்படையிலும், குறிப்பிட்ட நாடு அமெரிக்காவுக்கு விதிக்கும் வரியை பொறுத்து தான் அமைய உள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை மொத்தம் 21 நாடுகளை நியாயமற்ற முறையில் வர்த்தக நடைமுறையை பின்பற்றுவதாக பட்டியலிட்டு இருந்தது. அதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, யுனைடெட் கிங்டம் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். அதில் முதல் 15 நாடுகளை குறிவைத்து தான் வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
அதனடிப்படையில் டொனால்ட் டிரம்ப்பின் இந்த கூடுதல் வரி விதிப்பில் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் என்பது வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் நம் அண்டை நாடான சீனா தான் உள்ளது. டிரம்ப் வரி விதிப்பில் சீனா தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளது. இதற்கு அடுத்ததாக 2வது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. 3வது இடத்தில் மெக்சிகோ, 4வது இடத்தில் வியட்நாம், 5வது இடத்தில் அயர்லாந்து, 6வது இடத்தில் ஜெர்மனி, 7வது இடத்தில் தைவான், 8வது இடத்தில் ஜப்பான், 9வது இடத்தில் தென்கொரியா, 10வது இடத்தில் கனடா ஆகியவை உள்ளன. இந்த பட்டியலில் 11வது இடத்தில் இந்தியா இடம்பெறுகிறது. 12வது இடத்தில் தாய்லாந்து, 13வது இடத்தில் இத்தாலி, 14வது இடத்தில் ஸ்விட்சர்லாந்து, 15வது இடத்தில் மலேசியா, 16வது இடத்தில் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற உள்ளது.
இந்த 16 நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் நல்ல நிலையில் நடந்து வருகிறது. ஆனால் பொருள் ஏற்றுமதி, குறைந்த வரி விதிப்பு உள்ளிட்டவற்றால் இந்த நாடுகள் அமெரிக்காவை வைத்து லாபம் பார்க்கின்றன. ஆனால் மறுபுறம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்து அங்கேயும் லாபம் ஈட்டுவதாக டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். இப்படியான சூழலில் தான் இன்று இந்தியா உள்பட பல நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதிக்க உள்ளார். இதுபற்றி அறிவிப்பு வந்த பிறகு எந்தெந்த நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார் என்பது பற்றி முழுவிபரம் வெளியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications