இதுதான் கடைசி சான்ஸ்.. கொரோனா வைரஸ் குறித்து "ஹு" வெளியிட்ட அறிக்கை.. உருவாக்கப்பட்ட புது டீம்
நியூயார்க்: கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்ய உலக சுகாதார மையம் மீண்டும் ஒரு குழு அமைத்து உள்ளது. உலக சுகாதார மையத்தின் இந்த ஆலோசனை குழுதான் கொரோனா எப்படி தோன்றி மக்களிடையே பரவி இருக்கும் என்று மீண்டும் ஆராய்ச்சி செய்ய உள்ளது.
2019 இறுதியில் சீனாவின் வுஹான் பகுதியில் கொரோனா பரவல் தொடங்கியது. அதன்பின் உலகம் முழுக்க பரவி, மொத்த உலக பொருளாதாரம் தொடங்கி வாழ்க்கை முறை வரை அனைத்தையும் சின்ன வைரஸ் புரட்டி போட்டது. ஆனாலும் இந்த வைரஸின் தோற்றம் குறித்து இதுவரை உண்மையான பின்னணி கண்டறியப்படவில்லை.
கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியதா அல்லது இது செயற்கையாக பயோ வார் செய்ய வேண்டும் என்று உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி நிலவி வருகிறது. சீனாவின் வுஹன் ஆராய்ச்சி மையத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூட ஒரு வாதம் வைக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார மையம்
உலக சுகாதார மையம் தொடக்கத்தில் சீனா மீது எந்த விதமான குற்றச்சாட்டும் வைக்காமல் இருந்தது. சீனாவிற்கும் இந்த வைரசுக்கும் தொடர்பு இல்லை என்பது போல உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்பின் உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா பரவல் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய தொடங்கியது. கொரோனாவின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்தது.

ஆராய்ச்சியாளர்கள்
பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் கொரோனா வைரஸ் வெளவ்வாலில் இருந்து ஏதேனும் ஒரு விலங்கு மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம். பன்றி அல்லது எறும்புத்தின்னிக்கு வெளவ்வாலில் இருந்து இந்த வைரஸ் சென்று அங்கிருந்து மனிதர்களுக்கு இயற்கையாக வந்து இருக்கலாம் என்று உலக சுகாதார மையம் கூறியது.

அமெரிக்கா
ஆனால் உலக சுகாதார மையத்தின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாதான் இதற்கு காரணம் என்று அந்த நாடுகள் குற்றஞ்சாட்டின. அதோடு உலக சுகாதார மையமும், சீனா போதுமான ஆவணங்களை கொடுக்கவில்லை. கொரோனா பரவ தொடங்கிய நாட்களில் இருந்த ஆவணங்கள் பலவற்றை சீனா கொடுக்கவில்லை என்று கூறியது,

கொரோனா வைரஸின் தோற்றம்
இந்த நிலையில்தான் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்ய உலக சுகாதார மையம் மீண்டும் ஒரு குழு அமைத்து உள்ளது. உலக சுகாதார மையத்தின் இந்த ஆலோசனை குழுதான் கொரோனா எப்படி தோன்றி மக்களிடையே பரவி இருக்கும் என்று மீண்டும் ஆராய்ச்சி செய்ய உள்ளது. 26 ஆராய்ச்சியாளர்கள், உலக நாடுகளை சேர்ந்த வல்லுநர்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்ய உள்ளனர். சீனாவிடம் இவர்கள் கூடுதல் ஆதாரங்களை இந்த வைரஸ் தொடர்பாக கேட்க உள்ளனர்.

சீனா
இது தொடர்பாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் தோற்றம் குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். இதற்கு சீனா மட்டுமின்றி பன்னாட்டு ஒப்புதல் தேவைப்படும். 36க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு சீனா கூடுதல் ஆதாரங்களை, தகவல்களை கொடுக்க வேண்டும்.

எப்படி?
விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் வந்தது என்றால் எப்படி வந்தது என்று கண்டறியப்பட வேண்டும். இதுதான் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. இதுதான் கடைசி வாய்ப்பு என்று கூட கூறலாம். மொத்த உலகத்தையும் இந்த வைரஸ் செயல் இழக்க வைத்துவிட்டது. நாம் அனைத்து விஷயங்களையும் முறையாக கண்காணிக்க வேண்டும். அதன்பின் எங்கே தவறு நடந்தது என்று கண்டறிய வேண்டும்.

ஆராய்ச்சி
எங்கள் அணியை பல இடங்களுக்கு பிரிந்து சென்று விசாரிக்க சொல்ல இருக்கிறோம். இந்த வைரஸின் தோற்றத்தை கண்டுபிடிப்பது கொரோனா பரவலை தடுக்க மட்டும் உதவாது. வரும் காலத்தில் மேலும் பரவல் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்று உலக சுகாதார மைய ஆலோசனை குழு தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் இந்த புதிய ஆராய்ச்சியால் சீனாவிற்கு நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications