இந்தியர்களை நாடு கடத்த ராணுவ விமானம் பயன்படுத்தப்படுவது ஏன்? டிரம்ப் இவ்வளவு மோசமானவரா!
நியூயார்க்: சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறி, 7.25 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. ஆனால் இதற்காக ஏன் ராணுவ விமானம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான காரணம் தற்போது தெரிய வந்திருக்கிறது.
சமீபத்திய அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்ற தீவிரம் காட்டி வருகிறார்.

டெக்சாஸின் சான் ஆன்ட்ணியிலிருந்து சுமார் 205 இந்தியர்கள் C-17 எனும் ராணுவ விமானத்தில் பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விமானம் தற்போது பஞ்சாப்பில் தரையிறங்கியிருக்கிறது. ஆனால் சாதாரண பயணிகள் விமானத்திற்கு பதில் ஏன் C-17 ராணுவ விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது என்று கேள்வி எழுந்திருக்கிறது. இத்தனைக்கும் ராணுவ விமானத்தை விட பயணிகள் விமானம் பயன்படுத்தினால் செலவும் குறைவாகத்தான் ஆகும். ஆனாலும் ஏன் அமெரிக்கா அதை செய்ய மறுக்கிறது?
உதாரணமாக நியூயார்க்கிலிருந்து கவுத்தமலா 5000 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த நாட்டை சேர்ந்த சட்ட விரோதமாக குடியேறியவர்களை (அமெரிக்கா அப்படி சொல்கிறது) சாதாரண பயணிகள் விமானத்தில் முதல் வகுப்பில் அனுப்பி வைத்தால் ஒருவருக்கு ரூ.74,312தான் செலவாகும். இதே C-17 விமானத்தில் அனுப்பினால் ரூ.4.07 லட்சம் செலவாகும். இது 5 மடங்கு கூடுதல் செலவாகும்.
கடந்த 2023ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஆகும் செலவு குறித்து பேசப்பட்டிருந்தது. சாதாரண பயணிகள் விமானத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.14.80 லட்சம் செலவாகும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் C-17 விமானம் பறக்க 1 மணி நேரத்திற்கு ரூ.24.82 லட்சம் செலவாகும். ஏறத்தாழ இரண்டு மடங்கு செலவு இருந்தும் ஏன் ராணுவ விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது?
இந்த கேள்விக்கு பதில் டிரம்ப்பின் ஆணவம்தான். அதாவது முறையான ஆவணங்கள் இல்லாமல் வாழும் வெளிநாட்டவர்களை சட்டவிரோத குடியேறிகள் என குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் டிரம்ப் ஒருபடி மேலே போய், இவர்கள் 'ஏலியன்கள்', 'குற்றவாளிகள்' என்று கூறி வருகிறார். "வரலாற்றில் முதல் முறையாக நாங்கள் 'ஏலியன்களை' (முறையான ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்களை) கண்டுபிடித்து ராணுவ விமானங்களில் ஏற்றி, எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே கொண்டு சென்று விடுகிறோம்" என்று பேசியிருந்தார்.
அவர் இப்படி பேசிய அடுத்த நாள், அதாவது ஜன.24ம் தேதி, சிலர் கைவிலங்கு போடப்பட்டு, ராணுவ விமானத்தில் ஏற்றும் புகைப்படத்தை வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் x தளத்தில் ஷேர் செய்திருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மெக்சிகோவுக்கு 25% வரியை விதிக்க காரணமும் இதுதான். அதாவது மெக்சிகோ நாட்டவர்களை அமெரிக்கா இதுபோன்று ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தது. ஆனால் மெக்சிகோ இந்த விமானத்தை தங்கள் நாட்டில் தரையிறக்க முடியாது என்று கூறிவிட்டது. எங்கள் மக்களை நாங்கள் பயணிகள் விமானத்தில் திரும்ப அழைத்துக்கொள்கிறோம் என்று கூறியது. இதனால் டென்ஷன் ஆன டிரம்ப், அந்நாட்டுக்கு 25% வரியை விதித்தார்.
ஆக, டிரம்ப்பை பொறுத்தவரை முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் ஏலியன்கள். அவர்களுக்கு குறைந்தப்பட்ச மனிதாபிமானம் கூட பார்க்க வேண்டாம் என்பதே அவரின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications