ஊட்டி டாஸ்மாக்கில் புல் அடிச்சும் போதையில்லை.. குடிச்சது எல்லாமே அதுதானா? மொத்தமாக சிக்கிய ஊழியர்கள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மதுபானங்கள் வாங்கி குடித்த மதுப்பிரியர்கள், அங்கு போதையே ஏறவில்லை.. மதுவில் கலப்படம் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில், விசாரணையில் கலப்பட மது விற்றது உறுதியானது. இதையடுத்து ஊட்டியில் மதுவில் கலப்படம் செய்து விற்ற புகாரின்பேரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சில மதுக்கடைகளில் மதுபானங்கள் அருந்தினால், எவ்வளவு அடித்தாலும் போதை ஏறுவதே இல்லை என்று குடிமகன்கள் குற்றம்சாட்டுவது உண்டு. குவாட்டர் அடித்து போதை ஏறவில்லை என்று கூறி, இன்னொரு குவாட்டர் அடிக்கும் நிலைக்கு குடிமகன்கள் சில இடங்களில் தள்ளப்பட்டுள்ளனர். குடிமகன்கள் வேறுவழியில்லாமல் இதற்காக அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இந்த புகார்களின் பின்னணியில் சில சமயம் உண்மையும் இருக்கிறது. சில இடங்களில் கலப்பட மதுவிற்கப்பட்டதும், அதற்காக மதுபான பார் உரிமையாளர்கள் சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இந்த நீலகிரி மாவட்டத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் குறிப்பிட்ட சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள். இதன் மூலம் கணிசமான வருவாய் தினசரி கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 73 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் தினசரி ஒன்றரை கோடிக்கு மது விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் ஏப்ரல், மே மாதம் கோடை சீசன்கள் மற்றும் சனி ஞாயிறுகள், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இங்கு குளிர் பிரதேசம் என்பதால் மது விற்பனை எப்போதுமே அதிகமாக இருக்கும். வருபவர்களில் பலர் வெளியூர்காரர்கள் என்பதால், சில டாஸ்மாக் ஊழியர்கள் தண்ணீர் உள்ளிட்டவற்றை மதுவில் கலந்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு அதிக அளவில் எழுந்தது.
இதுகுறித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள டாஸ்மாக் பறக்கும் படை அதிகாரிகள் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் வந்து ஆய்வு செய்தனர். இதில் டாஸ்மாக்கில் மதுவில் கலப்படம் செய்த புகாரின் பேரில் 2 மேற்பார்வையாளர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வது தொடர்ந்தது. இதே போல் கூடுதல் விலைக்கும் மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரை அடுத்து கடந்த வாரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஊட்டி ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லோயர் பஜாரிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஆய்வு செய்தார்கள். இதில் மதுவில் கலப்படம் செய்து விற்றதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் 9 டாஸ்மாக் ஊழியர்கள் என 13 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் கண்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications