வேட்புமனு தாக்கலின்போது மாஸ்க் மறந்த அதிமுகவினர்.. ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்திய அதிமுக வேட்பாளர்!
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலின்போது அதிமுகவினர் மாஸ்க் போடாததால் அதிமுக வேட்பாளர் அபராதம் செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா
.அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோக ஒரு பக்கம் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் சில நாட்கள் அடங்கியிருந்த கொரோனா மீண்டும் ஆட்டம் காட்டி வருகிறது.
அரசியல்வாதிகளை அறிவுறுத்திய தேர்தல் ஆணையம்
பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கும், கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.வேட்புமனு தாக்கல், பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் மேற்கொள்ளும்போதும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
விதிகளை காற்றில் பறக்கவிடும் அரசியல்வாதிகள்
ஆனால் தமிழகத்தில் அரசியல்வாதிகள் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டனர். பெரும்பாலான பிரசார கூட்டங்களில் வேட்பாளர்களும் சரி, தொண்டர்களும் சரி தேர்தல் ஆணைய விதிகளை கடைபிடிப்பதில்லை. வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்களுடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் விதியாக உள்ளது. ஆனால் இதையும் யாரும் கடைபிடித்ததாக தெரியவில்லை.
ரூ.5 ஆயிரம் அபராதம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கப்பச்சி வினோத் போட்டியிடுகிறார். கப்பச்சி வினோத் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் வந்த அதிமுகவினர் மாஸ்க் அணியவில்லை. கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படாததால் அதிகாரிகள் கப்பச்சி வினோத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராத தொகை விதித்தனர். இதனை தொடர்ந்து அந்த பணத்தை அவர் செலுத்தினார். நீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்ட்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.