ஜம்ஜம்முன்னு மடியில் ஏறி.. அதுவும் "கலெக்டர்" மடியிலேயே.. "ரவுண்டு" கூப்பிட்ட மழலை.. ஊட்டியிலதான்..!
ஊட்டி கலெக்டரின் மடியில் அமர்ந்து கீழே இறங்க மறுத்த குழந்தையின் வீடியோ ஷேர் ஆகி வருகிறது
ஊட்டி: நீலகிரி கலெக்டர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி, காண்போரை நெகிழ வைத்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது:

மாத்திரை
"1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலும் வழங்கப்படுகிறது. ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி லிட்டர் அல்பெண்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும், ஒரு நபருக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட்டு வருகிறது...

குடற்புழுக்கள்
நீலகிரியில் இந்த மாத்திரைகள் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு துணை சுகாதார மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளிலும் 486 அங்கன்வாடி பணியாளர்கள் 216 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 413 ஆஷா பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் நேரடியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 52,982 பேரும் பயன் பெறுவார்கள். அல்பெண்டசோல் மாத்திரையை உட்கொள்வதால் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதுடன் ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் தகுதி வாய்ந்த பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகின்றது" என்றார்.

ஆசை ஆசையாக
கலெக்டர் நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிமுடித்தபிறகு, அங்கிருந்து கிளம்பி செல்ல முயன்றார்.. அதற்காக தன்னுடைய இன்னோவா காரில் ஏற வந்தார்.. அப்போது, அந்த அங்கன்வாடி மையத்தில் இருந்த அர்ஷத் என்ற குழந்தை, கலெக்டரி இன்னோவா காரை பார்த்துவிட்டான்.. அந்த காரில் தானும் செல்ல வேண்டும் என்று கலெக்டரிடமே ஆசையாக கேட்டான்.. சிரித்த முகத்துடன் மழலை இப்படி கேட்டதுமே கலெக்டர் ஆச்சரியப்பட்டு போனார்.. உடனே குழந்தையை வாங்கி தன்னுடைய மடியில் உட்கார வைத்து கொண்டார்..

ரவுண்டு போலாம்
அப்போது குழந்தை, "கார் கதவை மூடுங்க, நாம போகலாம்" என்றது.. உடனே கலெக்டரும், அந்த அங்கன்வாடி மையத்தில் இருந்து கொஞ்ச தூரம் மடியில் உட்கார வைத்தே காரில் அழைத்து சென்றார். காரில் கொஞ்ச தூரம் "ரவுண்டு" கூட்டி சென்றுவிட்டு, அந்த குழந்தையை அங்கன்வாடி மைய காப்பாளரிடம் கொடுக்க முயன்றார் கலெக்டர்.. அப்போது குழந்தை, அவர்களிடம் போக மாட்டேன் என்றும், காரை நிறுத்தாமல் ஓட்ட வேண்டும் என்றும் சொல்லி அடம் பிடித்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் திகைத்து விட்டனர்.. "இன்னொரு இன்னோவா கார் அங்கே நிற்கிறது, அதுல போகலாம்" என்று காப்பாளர் சொன்னாலும், குழந்தை அடம் பிடிப்பதை நிறுத்தவில்லை..












Click it and Unblock the Notifications