சிக்கும் முக்கிய புள்ளிகள்? யாருடன் போனில் பேசினார்கள்? 8000 பக்கம்.. கோடநாடு வழக்கு நாளை விசாரணை!
நீலகிரி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பிஜின் குட்டி உள்ளிட்ட 8 பேரின் செல்போன், சிம்கார்டுகள் குறித்து விவரங்கள் 8 ஆயிரம் பக்க அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கோடநாடு வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கோடநாடு எஸ்டேட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் எனக் கூறப்படும் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கு 6 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, நீலகிரி, சேலம் பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வரை 189 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி உள்ளிட்ட 8 பேரின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் குறித்த தகவல் பரிமாற்ற விபரங்கள் கிடைத்தால் அடுத்தக்கட்ட விசாரணைக்கு உதவியாக இருக்கும் என சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் கூறினர். இதையடுத்து அவர்களின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை கோவையில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு நீதிமன்றம் அனுப்பி ஆய்வு செய்யுமாறு கூறியது.
இதையடுத்து கோவை தொழில்நுட்ப ஆய்வகத்தில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்கள், சிம்கார்டுகள் வழியாக 2017 காலக்கட்டத்தில் நடந்த தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரம் 3 பென் டிரைவ்களில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதுபற்றிய விபரங்கள் 50க்கும் மேற்பட்ட பக்கங்களில் அறிக்கையாகவும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விவரங்களை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் பெற்றுச் சென்றனர்.
இந்நிலையில், அந்த விவரங்களைக் கொண்டு, 8 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தயார் செய்து, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த நபர்கள், அதிமுகவினர் யாருடனும் பேசினார்களா? முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்தார்களா, அல்லது கொலை, கொள்ளை குறித்து வேறு யாரும் பேசினார்களா? என்ற விபரங்கள் தெரிய வரலாம் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications