“இன்டர்போல் போலீசாரிடம் தகவல் கேட்டுள்ளோம்”.. கோடநாடு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சொன்ன சிபிசிஐடி!
நீலகிரி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 245 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இன்டர்போல் போலீசாரிடம் தகவல் கேட்டுள்ளது குறித்தும் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, உதகை நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேக வளையத்தில் இருப்பவர்களின் செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானார். மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
சிபிசிஐடி, ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். தற்போது சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்தனர். 245 பேரிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும், இன்டர்போல் போலீசாரிடம் தகவல் கேட்டுள்ளது குறித்தும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications