ஆ.ராசா மிகப் பெரிய ஊழல்வாதி! நீலகிரியில் அட்டாக்கை ஆரம்பித்த எல்.முருகன்! களைகட்டும் தேர்தல் கச்சேரி
நீலகிரி: ஆ.ராசா மிகப் பெரிய ஊழல்வாதி என்று விமர்சித்து நீலகிரியில் தனது அரசியல் அட்டாக்கை ஆரம்பித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வரலாறு காணாத ஊழல் செய்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆ.ராசா என்றும் 2ஜி ஊழல் மூலம் அவர் சேர்த்த சொத்துக்களை தான் அமலாக்கத்துறையினர் முடக்கியிருப்பதாகவும் எல்.முருகன் கூறியிருக்கிறார். திமுகவில் பல முன்னணி பிரமுகர்கள் உள்ள போதும் ஆ.ராசாவை மட்டும் எல்.முருகன் குறிவைத்து விமர்சிப்பதற்கான காரணம் இன்னுமா புரியவில்லை.

ஆம், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசாவும், எல்.முருகனும் நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதனால் தான் ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்து வருகிறார் எல்.முருகன். இதனிடையே நீலகிரியில் தொடர்ந்து முகாமிட்டு வரும் எல்.முருகன், அங்கு பாஜக புதிய அலுவலகத்தை திறந்து வைத்திருக்கிறார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு கொடுக்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் பற்றி விவரித்ததோடு மக்கள் ஊழலற்ற வெளிப்பட நிர்வாகத்துடன் கூடிய தூய்மையான அரசையே விரும்புவதாக எல்.முருகன் தெரிவித்தார்.
டெல்லியிலிருந்து தமிழகம் வரும் போதெல்லாம் நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகையில் தனது நிகழ்ச்சி நிரல்களை அமைத்துக் கொள்கிறார் எல்.முருகன். இதனிடையே தன் மீதான எல்.முருகனின் விமர்சனங்களை ஆ.ராசா ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவை திமுகவுக்கு போட்டியாகவே கருதவில்லை என்பதை ஆ.ராசா உணர்த்தியுள்ளார்.
அதிமுக மட்டுமே திமுகவுக்கு போட்டிக் கட்சி என்பதை ஆ.ராசா சொல்லாமல் சொல்லி வருகிறார். அதிமுக சார்பில் நீலகிரியில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் வேட்பாளராவார்.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் தேர்தல் கச்சேரி களை கட்டிவிட்டது.












Click it and Unblock the Notifications