பிரதமர் மோடியின் நீலகிரி வருகை: முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் 4 நாட்கள் மூடப்படுகிறது
நீலகிரி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, இன்று முதல் வருகிற 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஓய்வு விடுதிகள், உணவகங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும், வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது சமீபத்தில் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
அதேபோல, வருகிற 9-ந் தேதி புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.. அதாவது, புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்துக்கு வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி வருகை தர போவதாக தகவல் வெளியாகியுள்ளது... பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடுக்கு வருகை தர உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் டெல்லியில் அறிவித்துள்ளார்..
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு பிரதமர் மோடி வரும் 9-ம் தேதி வருகிறார். அங்கிருந்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து அவர்களை பாராட்ட உள்ளதாகவும், பின்னர் கேரளாவில் உள்ள வயநாடு சரணாலயத்துக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.. பிரதமர் வருவதாக வெளியான தகவலையடுத்து, முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது..
யானைபாடி, லைட்பாடி, தெக்குபாடி ஆகிய பழங்குடியின கிராமங்களில் நடைபாதை அமைப்பது, வீடுகள், கழிப்பறைகளை சீரமைத்து பெயிண்ட் பூசுவது போன்ற பணிகளும் வேகம் எடுத்துள்ளன. பாகன் பொம்மன், பெள்ளி தம்பதி வீடு, அதை சுற்றியுள்ள வீடுகளும் சீரமைக்கப்படுகின்றன. மசினகுடியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இதனிடையே, பிரதமர் மோடி வருகையையொட்டி, இன்று முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக புலிகள் காப்பகம் மூடப்படுவதாக காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் உள்ளிட்டவையும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூடப்படுகின்றன என்றும், வன விலங்குகளை பார்ப்பதற்கான வாகன சவாரி, 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தற்காலிக நிறுத்தப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது..












Click it and Unblock the Notifications