+2 ரிசல்ட்.. 32 மாணவர்களின் முடிவை நிறுத்திய பள்ளி கல்வித்துறை.. ஷாக்கான பெற்றோர்! காரணம் இதுதான்
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய மாணவர்களில் 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தற்போது விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சுமார் 52.75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் +2 பயில்கின்றனர். இவர்கள் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் பங்கேற்றிருந்தனர். இவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை 79 மையங்களில் நடைபெற்றது. இதனையடுத்து தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 8ம் தேதியான இன்றுதான் ரிசல்ட் வெளியானது.

காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதன்படி இந்த முறை தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.03 சதவிகிதமாகும். அதாவது தேர்வெழுதிய 8,03,385 பேரில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகளை விட மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 94.03 சதவிகிதமும் மாணவிகள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில்தான் மாணவர்கள் அதிக அளவில் (86.96%) தேர்ச்சியடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்ட மாணவர்கள்(87.30%) தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய மாணவர்களில் 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தற்போது விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 41 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். மாணவர்களின் தேர்வை கண்காணிக்க மட்டும் சுமார் 761 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த 41 மையத்தில் சாம்ராஜ் அரசு உதவிப்பெறும் பள்ளியும் ஒரு மையமாகும். இந்த மையத்தில் மார்ச் 27ம் தேதியன்று நடைபெற்ற கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு கணித தேர்வில் விடைகளை சொல்லி கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து நீலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதனையடுத்து 5 ஆசிரியர்களை மாவட்ட நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் இன்று +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், ஆசிரியர் சொல்லி கொடுத்து தேர்வு எழுதியதாக சொல்லப்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications