டீ குடிக்கும்போதே சுருண்டு விழுந்து இன்ஸ்பெக்டர் பலி! ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் நேர்ந்த சோகம்!
நீலகிரி: பணி ஓய்வு பெறுவதற்கு 1 நாள் முன்பாக, காவல்துறை இன்ஸ்பெக்டர் டீ குடித்துக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே கருமண் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (60). இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், சூரியகுமார் என்ற மகனும் உள்ளனர்.

தனபால் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் தனபால் டீ குடித்துள்ளார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து பதறிப்போன அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தனபாலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தனபாலின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரடைப்பால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் தனபால், இன்றுடன் (மே 31) பணி ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications