சாம்பாரில் செத்துக் கிடந்த எலி.. பிரபல ஹோட்டலில் தான் இந்த கொடுமை! ஊட்டி சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செயல்பட்டு வரும் பிரபல ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்ட சுற்றுலா பயணிகள், சாம்பாரில் எலி கிடந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சீசன் நாட்களில் மட்டுமல்லாது ஆண்டு முழுவதுமே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், நம்பி உணவு உண்ணும் சில பிரபல ஹோட்டல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் 'அம்..' எனத் தொடங்கும் தனியார் ஹோட்டல். அங்குதான் சுற்றுலா பயணி ஒருவருக்கு அதிர்ச்சிகரமான அனுபவம் நேர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் குடும்பத்தோடு ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். ஊட்டி வந்திறங்கியதும், காலை உணவு சாப்பிட 'அம்..' எனத் தொடங்கும் பிரபல ஹோட்டலுக்கு குடும்பத்தினரோடு சென்றுள்ளார். அப்போது, தட்டில் ஊற்றப்பட்ட சாம்பாரில் எலிக்குட்டி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனைக் கண்ட ஜெகன், அதிர்ந்து போய், ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டதற்கு, காய்கறியில் சிறிய புழு ஏதாவது இருந்திருக்கலாம் எனக் கூறி சமாதானம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், ஊட்டியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், சுகாதாரக்கேடு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, எலி செத்துக் கிடந்த சாம்பாரை சாப்பிட்ட ஜெகன் குடும்பத்தினர் தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்பாரில் எலி கிடந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், ஹோட்டல்களில் உணவு சாப்பிடுபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications