அனல் பறக்கும் தேர்தல் களம்:பீகாரில் முதல் கட்டமாக இன்று 71 தொகுதிகளில் வாக்கு பதிவு-பலத்த பாதுகாப்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முதல் கட்டமாக 71 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், விரிவான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 2,3வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
முதல் கட்டமாக இன்று 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க 1,000 பேர் முதல் 1,600 பேர் வரையிலான வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர், கையுறைகள், முக கவசங்கள், சோப் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டுள்ளன.
பீகார் தேர்தல்.. கள நிலவரம் ரொம்ப வித்தியாசமா இருக்குது.. ரிசல்டுக்கு பிறகு பெரிய டிவிஸ்டுகள் வரும்
71 தொகுதிகளில் வாக்குப் பதிவு
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ 35 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 29, ஆர்ஜேடி 42, காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியானது மொத்தம் 41 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
களத்தில் ஷ்ரேயாசி சிங்
காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங் நாளை தேர்தல் நடைபெறும் ஜமுய் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். ஷ்ரேயாசி சிங்குக்கு ஆதரவு தருவதாக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஏற்கனவே அறிவித்துள்ளது. ஷ்ரேயாசி சிங்கை எதிர்த்து ஆர்ஜேடி வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. விஜய் பிரகாஷ் யாதவ் போட்டியிடுகிறார். லாலு பிரசாத்தின் நெருங்கிய நண்பரான முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் சகோதரர் விஜய் பிரகாஷ் யாதவ்.
114 பெண்கள் உட்பட 1066 பேர் போட்டி
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் மகளான 28 வயது திவ்யா பிரகாஷூம் இம்முறஇ தாராபூர் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளராக களத்தில் இருக்கிறார். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 6 அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 1066 பேர் வேட்பாளர்கள் இவர்களில் 114 பேர் பெண்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் மாவட்டங்களில் கயா, ரோஹ்தாஸ் மற்றும் அவுரங்காபாத் ஆகியவை மாவோயிஸ்டுகள் செல்வாக்குமிக்கவை. ஆகையால் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.