பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 & 11 என இரு கட்டங்களாக தேர்தல்.. நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை
பாட்னா: பீகார் சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் நவம்பர் மாதம் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே பீகாரில் சட்டசபைத் தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் 14ம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பீகார் தேர்தல் அட்டவணையைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சற்று நேரத்திற்கு முன்பு அறிவித்தார். 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதியும் 2ம் கட்ட தேர்தல் நவம்பர் 11ம் தேதியும் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேர்தல் எப்படி நடந்தது?
பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு மூன்று கட்டங்களாக அக்டோபர் தொடங்கி நவம்பர் மாதம் வரை சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. அக்.28ம் தேதி முதல் கட்டமும், நவ.3ம் தேதி இரண்டாம் கட்டமும், நவ.7ம் தேதி மூன்றாம் மற்றும் இறுதி கட்டமும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 75 எம்எல்ஏக்களை வென்றது. அடுத்தபடியாக பாஜக 74 எம்எல்ஏக்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 எம்எல்ஏக்களையும், காங்கிரஸ் 19, சிபிஐஎம் (எம்-எல்) 12, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
பீகாரில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 243. பெரும்பான்மை வேண்டும் எனில் 122 இடங்களை கைப்பற்ற வேண்டும். தற்போது, பீகார் சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 80, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77, ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 மற்றும் காங்கிரஸுக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (விடுதலை) க்கு 11, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) க்கு 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) க்கு 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு 1 மற்றும் 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர்.
இந்த முறையும் NDA மற்றும் மகாபந்தன் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. NDA வில் JD(U), BJP, LJP (R), ஜிதன்ராம் மாஞ்சியின் ஹம் (மதச்சார்பற்ற) மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா போன்ற கட்சிகள் உள்ளன. மகாபந்தனில் RJD, காங்கிரஸ், CPI, CPM, CPI (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (VIP), JMM மற்றும் ராஷ்ட்ரிய LJP ஆகியவை அடங்கும்.
அசாதுதீன் ஓவைசியின் AIMIM இந்த இரண்டு கூட்டணிகளிலும் இல்லை. 2020 தேர்தலில் அவரது கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது, ஆனால் பின்னர் நான்கு எம்எல்ஏக்கள் RJD இல் இணைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications