பணி வேண்டும்.. போராடிய ஆசிரியர் தேர்வர்கள்.. போலீஸ் சரமாரி தடியடி.. பீகாரில் பரபரப்பு
பாட்னா: பீகாரில் பணி நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தேர்வர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில், தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய ஒரு ஆசிரியர் தேர்வரை கூடுதல் ஆட்சியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகாரில் ஆசியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசிடமும், பள்ளிக்கல்வித் துறையிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பொறுமையிழந்த ஆசிரியர் தேர்வர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் போராட்டம் பாட்னாவின் முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பணிநியமன ஆணை இல்லாமல் தாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர் தேர்வர்கள் உறுதியாக கூறினர். பலகட்ட பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் நூற்றுக்கணக்கான ஆயுதப்படையினர், அதிரடிப் படையினர் அங்கு வந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் தேர்வர்கள் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் சில போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் ஆட்சியர் தாக்குதல்
இதனிடையே, பாட்னாவில் ஆசிரியர் தேர்வர் ஒருவர் தேசியக் கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அங்கு வந்த பாட்னா கூடுதல் ஆட்சியர் கே.கே. சிங், தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய இளைஞரை பார்த்ததும் அவரை ஓடிச் சென்று அறைந்தார். இதில் அந்த இளைஞர் கீழே விழுந்ததும் அருகில் இருந்த காவலரின் கையில் இருந்த லத்தியை வாங்கிய அவர், அந்த இளைஞர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் அந்த இளைஞரின் முகத்தில் ரத்தம் கொட்டியது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, கூடுதல் ஆட்சியர் கே.கே. சிங்குக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வர் மீது தாக்குதல் நடத்திய கூடுதல் ஆட்சியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications