பிரளயத்தை ஏற்படுத்திய பீகார் ஜாதிவாரி கணக்கு- இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டும் நிதிஷ்குமார்!
பாட்னா: இந்திய விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட பெருமையை பெற்றுள்ளது பீகார். அம்மாநிலத்தின் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் நிதிஷ்குமார் கூட்டியுள்ளார்.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் 1931-ம் ஆண்டுதான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. தற்போது வரை ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமாக நடத்தப்பட்டது இல்லை.

1931-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் இன்றைய இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆகையால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பது நீண்டகால கோரிக்கை. அண்மைக்காலமாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதனை வலியுறுத்தி வந்தார்.
இதனிடையே பெரும் சட்டப் போராட்டங்களுக்கு நடுவே பீகாரில் ஆளும் இந்தியா கூட்டணி அரசு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை திங்கள்கிழமை பகிரங்கப்படுத்தியது. இதன்படி, பீகாரில் பிற்படுத்தப்பட்டோர் 63.14% : பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%; ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14%; பொதுப் பிரிவினர் 15.52%; தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%.; பழங்குடி இன மக்கள் 1.69%.
மத ரீதியான கணக்கெடுப்பு விவரம்: இந்துக்கள் 81.99%; முஸ்லிம்கள் 17.7% ; கிறிஸ்தவர்கள் 0.05% ; சீக்கியர்கள் 0.01%; பவுத்தர்கள்- 0.08% ; இதர மதத்தினர் 0.12%
ஜாதி அடிப்படையில்.. : யாதவர்கள் (துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஜாதி) : 14%; குஷாவா 4.27% ; பிராமணர்கள் 3.65% ; முஷாகர்- 3% குர்மி (நிதிஷ்குமார் ஜாதி) 2.87% ; பூமிகார்- 2.86%.
இந்த புள்ளி விவரங்களுக்கும் தற்போது அனுபவித்து வரும் இடஒதுக்கீடு விகிதங்களுக்கும் பெரும் முரண்பாடு இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. இதனால் நாடு முழுவதுமே இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பகிர்ந்து கொள்ள முதல்வர் நிதிஷ்குமார் பீகார் மாநில அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications