கோவிட் டெஸ்ட்.. செல் நம்பர் டூ எல்லாமே போலி.. மிரள வைக்கும் பீகார்! ஷாக் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது
பாட்னா: பீகாரில் கொரோனா சோதனையே நடத்தாமல் நெகட்டிவ் என்று சான்றிதழ் கொடுத்ததும், போலியான மொபைல் எண்கள், போலியான பெயர்கள், போலியான முகவரிகள் என கொரோனா சோதனையில் பெரும் முறைகேடு நடந்திருப்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்' வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
கடந்த மாதம் பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் உள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் (பி.எச்.சி) 588 பேரிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அனைவருக்குமே கொரோனா இல்லை என்று நெகட்டிவ் வந்தது. சோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு நபரின் பெயர், வயது மற்றும் செல் எண் உள்ளிட்டவை தலைநகர் பாட்னாவுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலிருந்து சோதனை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய தரவுகள் திரட்டப்பட்டன.
இப்படி சேகரிக்கப்பட்ட தகவல்கள் உள்ள மொபைல் எண், பெயர், முகவரி என அனைத்துமே போலி என்பதும் இதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதையும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பார்வையிட்டோம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் சார்பாக ஜமுய், ஷெய்க்புரா மற்றும் பாட்னாவில் உள்ள ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களை ( பி.எச்.சிகளை) பார்வையிட்டார்கள்., ஜனவரி 16, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சோதனை பதிவுகளை வாங்கி பார்த்தோம்.
சோதனை நடக்கவில்லை
ஜமுயியில், அந்த நாட்களில் மூன்று பி.எச்.சி.களில் 588 பேரின் விவரங்களையும் ஒவ்வொன்றாக பார்த்தோம், மேலும் பல சுகாதார ஊழியர்களுடன் பேசினோம். அவர்கள் அடிப்படை தகவல்கள் மற்றும் சோதனை குறித்த இலக்கை அடைய முறைகேடுகள் செய்தது தெரியவந்தது. போலியான மொபைல் எண்கள் முதல் போலி பெயர்கள் மற்றும் போலியான முகவரிகளை பதிவு செய்தது வரை தெரியவந்தது. மேலும் பலருக்கு சோதனையே நடத்தாமல் சோதனை நடத்தியதாக கணக்கு காண்பித்ததையும், கண்டுபிடித்துள்ளோம்.
அம்பலமானது
அந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளை சில உண்மைகள் என்னென்ன என்பதை இப்போது பாப்போம். ஜமுயியில் உள்ள பர்ஹாட்டிற்கான 230 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் 12 பேரிடம் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது.. சிக்கந்தரா பி.எச்.சியில், 208 சோதனை என்று கூறப்பட்ட நிலையில் 43 பேரிடம் மட்டுமே சோதனை செய்யப்பட்டன. ஜமுய் சதரில், 150 சோதனை என்று சொல்லப்பட்ட நிலையில் 65 பேரிடம் மட்டுமே சோதனை நடத்தி உள்ளார்கள்.
எனக்கு சோதனை நடக்கவில்லை
இதேபோல் பீகான் பர்ஹாட்டில், சோதனைக்கு உள்ளான 14 பேரின் செல் எண் மற்றும் ஜனவரி 16 அன்று சோதிக்கப்பட்ட 11 பேர் மற்றும் ஜனவரி 25 அன்று சோதனை செய்யப்பட்ட 13 பேரின் செல்போன்கள் ஒன்றாகவும் , சில அப்படியான செல்போன் நம்பரே இல்லை என்பது தெரியவந்தது. இதேபோல் தான் 13 சிக்கந்தராவில், 16 பேரின் தகவல்கள் தவறாக இருந்தது. பர்ஹாட்டில் RT-PCR சோதனைகளைப் பெற்ற 26 பேருக்கு ஒரு மொபைல் எண் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண் சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள பாங்காவில் உள்ள ஷம்புகஞ்சிலியைச் சேர்ந்த பைஜு ராஜக்கிற்கு சொந்தமானது. "இந்த நபர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, என் குடும்பத்தில் யாரும் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை" என்று ராஜக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
போலியானது
ஜனவரி 25 ஆம் தேதி பீகாரின் ஷெய்க்புரா மாவட்டத்தின் பார்பிகாவில் சோனாலி குமாரி மற்றும் அஜீத் குமார் ஆகியோருக்கு' நடத்தப்பட்ட கோவிட் சோதனையில் நெகட்டிவ் வந்ததாக காட்டுகின்றன. ஆனால் அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் உ.பி.யின் பிரதாப்கரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர் விஜய் குமாருக்கு சொந்தமானது. ஆனால் "இந்த நபர்களை எனக்குத் தெரியாது, எனக்கும் பீகாரில் உள்ளவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த கோவிட் சோதனையும் எடுக்கவில்லை, "என்று விஜய் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.
புலம் பெயர் தொழிலாளர்கள்
பீகாரில் கடந்த ஆண்டு மத்தியில் கொரோனா தொற்றுநோய் கடுமையாக அதிகரித்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வந்த காரணத்தால், தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக பீகார் மாறியது. பீகாரில் இதுவரை 2,61,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்போம்
இந்த சோதனை முறைகேடுகள் குறித்து ஜமுய் மாவட்ட திட்ட மேலாளர் (டிபிஎம்) சுதான்ஷு லாலிடம் கேட்ட போது: "கோவிட் சோதனை தரவு மோசடி குறித்து எங்களுக்கு சில புகார்கள் வந்துள்ளன. பர்ஹாட் பி.எச்.சி மருத்துவ அதிகாரியின் சம்பளத்தையும் நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் விசாரணையில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்." என்றார். ஷெய்க்புரா டிபிஎம் ஷியாம்குமார் நிர்மல் இதுபற்றி கூறும் போது: "ஆரம்ப கட்டங்களில், பல நோயாளிகள் சரியான எண்களை கொடுக்கவில்லை. ஆனால் உத்தரபிரதேச எண் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். " என்றார்-
சுகாதாரத்துறை உறுதி
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பீகார் சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் பிரதயா அம்ரித் கூறுகையில்: "இது பற்றி எல்லா மட்டங்களிலும் விசாரிக்கப்படும். இதுபோன்ற விஷயங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதை விளக்குமாறு பொது அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் கேட்கிறோம். இதுபோன்ற சோதனைகளை ஆதருடன் இணைக்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். கோவிட் தடுப்பூசிக்காக இந்த முறையை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்" என்றார்.