மீண்டும் மோடி- நிதிஷ் கூட்டணியை ஆட்சியில் அமர வைக்கும் பீகார் மக்கள்! P-Marq எக்ஸிட் போல் முடிவுகள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் என்டிஏ கூட்டணியே வெல்லும் என்று கூறியுள்ளது. இதற்கிடையே P-Marq எக்ஸிட் போல் முடிவுகளிலும் பாஜக கூட்டணியே வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருந்தது. அங்கு மொத்தம் 243 தொகுதிகள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் 122 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்ற சூழல் இருக்கிறது.

இதற்கிடையே இன்று இரண்டாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான எக்ஸிட் போல்களிலும் பாஜக- ஜேடியு கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணியால் கடந்த முறையை விடச் சற்று குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் எனப் பல எக்ஸிட் போல்களில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளையும் போல P-Marqம் கூட பாஜக கூட்டணியே இந்த முறை பீகாரில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது. பாஜக- ஜேடியுவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 142 முதல் 162 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக P-Marq எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதே நேரத்தில், இந்தியா கூட்டணி அங்கு 80 முதல் 98 இடங்களில் வெல்லும் என P-Marq செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்த முறை தேர்தல் வியூக வல்லுநராக இருந்த பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, மாநிலம் முழுக்க தனித்துப் போட்டியிட்டார். இருப்பினும், பீகாரில் இந்த முறை பிரசாந்த் கிஷோர் கட்சி மிகக் குறைந்த இடங்களிலேயே வெல்லும் என P-Marq தெரிவித்துள்ளது. அவரது ஜன் சுராஜ் கட்சி 1 முதல் 4 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று P-Marq தெரிவித்துள்ளது. இதர கட்சிகள் 0 முதல் 3 இடங்களில் தான் வெல்லும் என்று P-Marq சர்வேயில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications