பீகாரில் வெற்றி யாருக்கு? ஆதிக்கம் செலுத்தும் சாதி வாக்குகள்.. ஓர் அலசல்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. மாநிலத்தின் முதலமைச்சராக நிதீஷ் குமார் இருக்கிறார். இங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் இம்முறை யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
பீகார் மாநிலத்தை பொறுத்தவரை ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பாஜக இந்த மூன்று கட்சிகள் தான் ஆட்சியை கைப்பற்றி வருகின்றன.

வாக்கு சதவிகிதமும் வெற்றி வாய்ப்பும்
கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 23.11 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தது. இருப்பினும் 19.46 சதவீதம் பெற்று இரண்டாம் இடம் பெற்ற பாஜக மற்றும் 15.39 சதவீதம் பெற்று மூன்றாம் இடம் பிடித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதனால் பாஜக உதவியுடன் நிதிஷ்குமார் தற்போது முதலமைச்சராக நீடித்து வருகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் 9.48 சதவீதம் வாக்குகளையும் இடதுசாரி கட்சிகள் 4.64% வாக்குகளையும் பெற்றிருந்தன.
வாக்கு சதவிகிதமும் தொகுதிகளும்
இது தவிர, சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (சமயச்சார்பற்ற), மற்றும் முகேஷ் சஹானியின் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி போன்ற சிறிய கட்சிகளும் தத்தமது கூட்டணிகளுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்க உதவின. என்னதான் வாக்கு சதவிகிதத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் அதிக இடங்களை பெற்றிருந்தாலும், தொகுதி எண்ணிக்கையில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் முன்னணியில் இருந்தன. அதாவது,
- ராஷ்டிரிய ஜனதா தளம் - வாக்கு சதவிகிதம் 23.11% - தொகுதி வெற்றி 75
- காங்கிரஸ் - வாக்கு சதவிகிதம் 9.48% - தொகுதி வெற்றி 19
- சிபிஎம் (எம்-எல்)எல் - வாக்கு சதவிகிதம் 3.16% - தொகுதி வெற்றி 12
- ஐக்கிய ஜனதா தளம் - வாக்கு சதவிகிதம் 15.39% - தொகுதி வெற்றி 43
- பாஜக - வாக்கு சதவிகிதம் 19.46% - தொகுதி வெற்றி 74
கடந்த 2005 முதல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இருப்பினும் தனது முஸ்லிம் மற்றும் யாதவ் வாக்கு வங்கியை விரிவுபடுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. குறிப்பாக ஓபிசி வாக்கு வங்கியை கவனத்தில் கொண்டிருக்கிறது.
சாதி ரீதியான வாக்குகள்
இதற்காக குஷ்வாஹா, தனுக், மல்லா போன்ற இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை கவரும் முயற்சியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இறங்கியிருக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் இக்கட்சி, குஷ்வாஹா சமூகத்தினரை அதிக அளவில் வேட்பாளராக களமிறக்கியிருந்தது. அதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமான தனுக் சமூகத்தை சேர்ந்த மங்கனி லால் மண்டலை, கட்சியின் மாநில தலைவராக நியமித்திருக்கிறது. பீகாரை பொறுத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சுமார் 36% இருக்கின்றனர். இவர்கள்தான் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். மறுபுறம் CPI(M-L) கூட்டணி மூலம் தலித்துகளின் வாக்குகளையும் பெற கட்சி முயன்று வருகிறது.
எங்கெங்கு எந்த வாக்கு வங்கி அதிகம்?
வட பீகாரின் கோசி-மிதிலாஞ்சல் பகுதியின் சமஸ்திபூர், தர்பங்கா, மதுபானி போன்ற மாவட்டங்களில் கிட்டத்தட்ட 40 சட்டமன்றத் தொகுதிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த சமூகத்தை சேர்ந்தவரை தலைவராக நியமித்திருப்பதன் மூலம் 40 தொகுதிகளிலும் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் வியூகம்
அதேபோல கங்கை நதிக்கரையில் உள்ள தொகுதிகளில் மல்லா அல்லது கேவத் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இவர்களின் கட்சியாக முகேஷ் சஹானியின் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி இருக்கிறது. இது தற்போது ராஷ்டிரிய ஜனதா தளத்துடன்தான் கூட்டணி இருக்கிறது. எனவே இந்த பகுதியிலும் வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம். ராஷ்டிரிய ஜனதா தளத்தை பின்பற்றி காங்கிரஸ் கட்சியும், ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவரை தனது மாநில தலைவராக நியமித்திருக்கிறது. இச்சமூகத்திற்கு மாநிலத்தில் இதுவரை ஒரு பெரிய அரசியல் தலைவர் இல்லை. எனவே வாக்கு வங்கியை கவர இந்த தலைவரை காங்கிரஸ் நியமித்திருக்கிறது.
யாருக்கு வெற்றி?
அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய விஷயம். கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் முதல்வராக தொடர்கிறார். எனவே இயல்பாகவே அவருக்கு எதிரான அதிருப்திகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இதை சரி செய்ய பெண்களை மையப்படுத்தி வாக்குறுதிகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறார். குறிப்பாக மதுவிலக்கு மற்றும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் போன்ற திட்டங்களால் நிதீஷ் குமார் பெண் வாக்காளர்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றுள்ளார். சாதி வேறுபாடற்ற இந்த பெண் வாக்காளர் வங்கி இவரது வெற்றி கை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
நிதிஷ்குமாரின் தேர்தல் வியூகம் வெற்றிப்பெறுகிறதா? எதிர்க்கட்சிகளின் பிரசாரம் வெற்றிப்பெறுகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications